Saturday, June 12, 2010

கன்னிமை - கி. ராஜநாராயணன்

சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று
நினைக்கவேயில்லை.

kira2அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர் அண்ணன் தம்பிகள்.
‘பெண்ணடி’யில்லை என்று என் தாய் அவளைத் தத்து எடுத்துத் தன் மகளாக்கிக்
கொண்டாள்.

அம்மாவைவிட எங்களுக்குத்தான் சந்தோஷம் ரொம்ப. இப்படி ஒரு அருமைச் சகோதரி யாருக்குக் கிடைப்பாள்? அழகிலும் சரி, புத்திசாலித்தனத்திலும் சரி அவளுக்கு
நிகர் அவளேதான்.

அவள் ‘மனுஷி’யாகி எங்கள் வீட்டில் கன்னிகாத்த அந்த நாட்கள் எங்கள்
குடும்பத்துக்கே பொன் நாட்கள்.

வேலைக்காரர்களுக்குக்கூட அவளுடைய கையினால் கஞ்சி ஊற்றினால்தான் திருப்தி.
நிறைய்ய மோர்விட்டுக் கம்மஞ்சோற்றைப் பிசைந்து கரைத்து மோர் மிளகு வத்தலைப் பக்குவமாக எண்ணெயில் வறுத்துக் கொண்டுவந்து விடுவாள். சருவச் சட்டியிலிருந்து வெங்கலச் செம்பில் கடகடவென்று ஊற்ற, அந்த மிளகு வத்தலை எடுத்து வாயில் போட்டு நொறு நொறுவென்று மென்றுகொண்டே, அண்ணாந்து கஞ்சியை விட்டுக்கொண்டு அவர்கள் ஆனந்தமாய்க் குடிக்கும்போது பார்த்தால், ‘நாமும் அப்படிக் குடித்தால் நன்றாக இருக்கும்போலிருக்கிறதே!’ என்று தோன்றும்.

ஒரு நாளைக்கு உருத்த பச்சை வெங்காயம் கொண்டுவந்து ‘கடித்துக்’ கொள்ள
கொடுப்பாள். ஒரு நாளைக்குப் பச்சை மிளகாயும், உப்பும். பச்சை மிளகாயின்
காம்பைப் பறித்துவிட்டு அந்த இடத்தில் சிறிது கம்மங்கஞ்சியைத் தொட்டு அதை
உப்பில் தோய்ப்பார்கள். உப்பு அதில் தாராளமாய் ஒட்டிக்கொள்ளும். அப்படியே
வாயில் போட்டுக்கொண்டு கசமுச என்று மெல்லுவார்கள். அது, கஞ்சியைக் ‘கொண்டா
கொண்டா’ என்று சொல்லுமாம்! இரவில் அவர்களுக்கு வெதுவெதுப்பாகக் குதிரைவாலிச் சோறுபோட்டு தாராளமாஅ பருப்புக்கறி விட்டு நல்லெண்ணெயும் ஊற்றுவாள். இதுக்குப் புளி ஊற்றி அவித்த சீனியவரைக்காய் வெஞ்சனமாகக் கொண்டுவந்து வைப்பாள். இரண்டாந்தரம் சோற்றுக்குக் கும்பா நிறைய ரஸம். ரஸத்தில் ஊறிய உருண்டை உருண்டையான குதிரைவாலிப் பருக்கைகளை அவர்கள் கை நிறைய எடுத்துப் பிழிந்து உண்பார்கள்.

வேலைக்காரர்களுக்கு மட்டுமில்லை, பிச்சைக்காரர்களுக்குக்கூட நாச்சியாரம்மா
என்றால் ‘குலதெய்வம்’தான். அவளுக்கு என்னவோ அப்படி அடுத்தவர்களுக்குப்
படைத்துப் படைத்து அவர்கள் உண்டு பசி ஆறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதில் ஒரு தேவ திருப்தி.

அவள் வாழ்க்கைப்பட்டு, புருஷன் வீட்டுக்குப் போனபிறகு எங்கள் நாக்குகள் எல்லாம்
இப்போது சப்பிட்டுப் போய்விட்டது. உயர்ந்த ஜாதி நெத்திலியைத் தலைகளைக் கிள்ளி
நீக்கிவிட்டுக் காரம் இட்டு வறுத்துக் கொடுப்பாள். இப்போது யாருமில்லை எங்களுக்கு. அந்தப் பொன்முறுவல் பக்குவம் யாருக்கும் கைவராது. பருப்புச்சோற்றுக்கு உப்புக்கண்டம் வறுத்துக் கொடுப்பாள். ரஸ சாதத்துக்கு முட்டை அவித்துக் காரமிட்டுக் கொடுப்பாள். திரண்ட கட்டி வெண்ணெயை எடுத்துத் தின்னக் கொடுப்பாள், அம்மாவுக்குத் தெரியாமல்.

அவள் அப்பொழுது எங்கள் வீட்டிலிருந்தது வீடு நிறைந்திருந்தது. தீபம்போல் வீடு
நிறைஒளி விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்தாள்.

மார்கழி மாசம் பிறந்துவிட்டால் வீட்டினுள்ளும் தெருவாசல் முற்றத்திலும் தினமும்
வகை வகையான கோலங்கள் போட்டு அழகுபடுத்துவாள். அதிகாலையில் எழுந்து நீராடி திவ்யப்பிரபந்தம் பாடுவாள். இப்பொழுதும் பல திருப்பாவைப் பாடல்களை என்னால் பாராமல் ஒப்புவிக்கமுடியும். சிறுவயசில் அவளால் பிரபந்தப் பாடல்களைப் பாடக் கேட்டுக்கேட்டு எங்கள் எல்லோர்க்கும் அது மனப்பாடம் ஆகிவிட்டது.

அப்பொழுது எங்கள் வீட்டில் மரத் திருவிளக்கு என்று ஒன்று இருந்தது. அது
அவ்வளவும் மரத்தினாலேயே ஆனது. தச்சன் அதில் பல இடங்களில் உளிகளைப் பதித்து நேர்கோடுகளால் ஆன கோலங்களைப் போட்டிருந்தான். மொங்காங்கட்டையின் வடிவத்தில் நிற்கும் பெரிதான பற்கள் இருக்கும். அதில் உயரத்துக்குத் தகுந்தபடி ஏற்றவும் இறக்கவும் வசதியாக இருக்கும்படியாக ‘ட’ வடிவத்தில் ஒரு துளையிட்ட சக்கையில் ‘சல்ல முத்த’ என்று சொல்லப்படும் மாட்டுச்சாண உருண்டையின் மீது மண் அகல்விளக்கு வைக்கப்பட்டு எரியும். சாணி உருண்டை தினமும் விளக்கு இடும் போதெல்லாம் மாற்றிவிட்டுப் புதிதாக வைக்கப்படும். அப்புறம் x மாதிரி ஒரு போர்வைப் பலகை கொண்டு இரவு வெகு நேரம் வரைக்கும் பெண்கள் புடைசூழ இவள் உரக்க ராகமிட்டு வாசிப்பாள். வாசித்துக்கொண்டே வரும்போது இவளும் மற்றப் பெண்களும் கண்ணீர் விடுவார்கள். கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தொண்டை கம்மத் திரும்பவும் ராகமிட்டு வசனத்தைப் பாடுவாள். அவர்கள் கண்ணீர் விடுவதையும் மூக்கைச் சிந்துவதையும் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு பேசாமல் இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.

அவள் வாசிப்பதை என் காதுகள் வாங்கிக்கொள்ளாது. என் கண்களே பார்க்கவும்
செய்யும்; ‘கேட்க’வும் செய்யும்.

விளக்கின் ஒளியில்தான் அவள் எவ்வளவு அழகாகப் பிரகாசிக்கிறாள். அழகுக்கும்
விளக்கின் ஒளிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. கறிக்கு உப்பைப்போல் அழகுக்கும்
அதி ருசி கூட்டுகிறதுபோலும் விளக்கு.

தானாகக் கண்கள் சோர்ந்து மூடிக்கொண்டுவிடும்.

அதிகாலையில் ரங்கையா வந்து என்னை எழுப்பினான். ராமர், லக்‌ஷ்மணர், சீதை மூவரும் எங்கள் தெருவின் முடிவிலுள்ள கிழக்காகப் பார்த்த ஒரு வீட்டிலிருந்து இறங்கிக் காட்டுக்குப் போகிறார்கள். பார்வதி அம்மன் கோயிலைத் தாண்டி, பள்ளிக்கூடத்தையும் கடந்து, கம்மாய்க்கரை வழியாக அந்த மூவரும் போகிறாள். எனக்குத் தொண்டையில் வலிக்கிறாற்போல் இருக்கிறது. முகத்தைச் சுளிக்க முடியவில்லை. ரங்கையா தோள்களைப் பிடித்துப் பலமாக உலுக்கியதால் விழித்துவிட்டேன். சே! நன்றாக விடிந்துவிட்டிருக்கிறது. ரங்கையா சிரித்துக்கொண்டு நின்றிருந்தான், கிளம்பு கிளம்பு என்று ஜரூர்ப்படுத்தினான்.

நாச்சியாரம்மா செம்பு நிறையத் தயிர் கொண்டுவந்து வைத்தாள், இருவரும்
வயிறுமுட்டக் குடித்துவிட்டுக் கிளம்பினோம்.

ரங்கையா எங்கள் மச்சினன்; ‘வீட்டுக்கு மேல்’ வரப்போகும் மாப்பிள்ளை.
நாச்சியாரம்மாவை இவனுக்குத்தான் கொடுக்க இருக்கிறோம். இவனும்
நாச்சியாரம்மாபேரில் உயிரையே வைத்திருக்கிறான்; அவளும் அப்படித்தான்.

‘புல்லை’யையும் ’மயிலை’ யையும் பிடித்து ரங்கையா வண்டி போட்டான். அவை இரண்டும் எங்கள் தொழுவில் பிறந்தவை. ஒன்று இரண்டு; இன்னொன்று நாலு பல். பாய்ச்சலில் புறப்பட்டது வண்டி. ஊணுக் கம்பைப் பிடித்துத்தொத்தி, அவற்றில் இரண்டைக் கைக்கு ஒன்றாகப் பிடித்துக்கொண்டு குனிந்து நின்றுகொண்டேன். சட்டத்தில் இரும்பு வளையங்கள் அதிர்ந்து குலுங்கிச் சத்தம் எழுப்பியது. வண்டியின் வேகத்தினால் ஏற்பட்ட குலுக்கலில் உடம்பு அதிர்ந்தது. கல்லாஞ்சிரட்டைத் தாண்டி வண்டியின் அறைத் தடத்துக்குள் காளைகள் நிதானங்கொண்டு நடை போட்டன.

நடுவோடைப் பாதையிலுள்ள வன்னிமரத்தருகில் வண்டியை அவிழ்த்து, காளைகளை
மேய்ச்சலுக்காக ஓடைக்குக் கொண்டு போனோம்.

காட்டில் பருத்தி எடுக்கும் பெண்கள் காட்டுப் பாடல்கள் பாடிக்
கொண்டிருந்தார்கள். அவர்களிடையே நாச்சியாரம்மாவும் நிரை போட்டுப் பருத்தி
எடுத்துக் கொண்டிருந்தாள். பருத்தி ‘காடாய்’ வெடித்துக் கிடந்தது; பச்சை
வானத்தில் நட்சத்திரங்களைப்போலே. ரங்கையா தன் மடியிலிருந்த கம்பரக் கத்தியால்
கருவைக் குச்சியைச் சீவி, பல் தேய்க்கத் தனக்கு ஒன்று வைத்துக்கொண்டு எனக்கு
ஒன்று கொடுத்தான். போக இன்னொன்று தயார் செய்து வைத்துக்கொண்டான்!

நேரம், கிடை எழுப்புகிற நேரத்துக்கும் அதிகமாகிவிட்டது. காளைகள் வயிறு முட்டப்
புல்மேய்ந்து விட்டு வன்னிமர நிழலில் படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்தன.

நாச்சியாரம்மா, பருத்தியைக் கருவமரத்து நிழலில் கூறுவைத்துக் கொடுத்துக்
கொண்டிருந்தாள். மடிப் பருத்தி, பிள்ளைப் பருத்தி, போடு பருத்தி என்று
பகிர்ந்து போட, பள்ளுப் பெண்கள் சந்தோஷமாக நாச்சியாரம்மாவை வாழ்த்திக்கொண்டே வாங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் வேறு யார் வந்து கூறுவைத்துக் கொடுத்தாலும் ஒப்பமாட்டார்கள். நாச்சியாரம்மாதான் வேணும் அவர்களுக்கு.

கிஸ்தான் தாட்டுக்களில் பகிர்ந்த பருத்தி அம்பாரத்தைப் பொதியாக்கட்டி வண்டியில்
பாரம் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டோம். பள்ளுப்பெண்கள் முன்கூட்டிப்
புறப்பட்டுப் போய் விட்டார்கள் - நாச்சியாரம்மாவும் நானும் வண்டியில்
ஏறிக்கொண்டு பருத்திப் பொட்டணங்களின்மேல் உட்கார்ந்துகொண்டு ஊணுக்கம்புகளைப் பிடித்துக்கொண்டோம். ரங்கையா வண்டியை விரட்டினான்.

வருகிற பாதையில் மடியில் பகிர்ந்த பருத்தியோடு நடந்து வருகிற பெண்டுகளின்
கூட்டத்தைக் கடந்துகொண்டே வந்தது வண்டி. அவர்கள் வேண்டுமென்று
குடிகாரர்களைப்போல் தள்ளாடி நடந்துகொண்டே வேடிக்கைப் பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒருவருக்கொருவர் கேலிசெய்து தள்ளிக்கொண்டும் வந்தார்கள். தொட்டெரம்மா கோயில் பக்கத்தில் வந்ததும் ரங்கையா கயிறுகளை முழங்கைகளில் சுற்றி இழுத்து வண்டியை நிறுத்தினான். தொட்டெரம்மா கோயிலின் இலந்தைமுள் கோட்டையின்மேல் நாச்சியாரம்மா ஒரு கூறு பருத்தியை எடுத்து இரு கைகளிலும் ஏந்திப் பயபக்தியோடு அந்த முள்கோட்டையின் மீது போட்டாள். பின்னால் வந்துக்கொண்டிருந்த பள்ளுப்பெண்கள் குலவையிட்டார்கள். ரங்கையா கயிற்றை நெகிழ்ந்து விட்டதும் புல்லையும் மயிலையும் வால்களை விடைத்துக்கொண்டு பாய்ந்து புறப்பட்டது.

********

ஊரெல்லாம் ஒரே சலசலப்பு. என்ன ஆகுமோ என்ற பயம். தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே வந்து சேர்ந்தான் ரங்கையா. ‘என்ன ஆச்சி?’ என்று அவனைக் கேட்பதுபோல் பார்த்தோம் யாவரும். அவன் என்னை மட்டிலும் ‘ராஜா, இங்கே வா’ என்று தனியாகக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான்.

எங்கள் ஊரில், சுந்தரத்தேவன் என்று ஒரு பெரிய போக்கிரி இருந்தான். ஏழுதடவை
ஜெயிலுக்குப் போனவன். மூன்று கொலைகள் செய்தவன். அதில் ஒன்று இரட்டைக் கொலை. அவனுடைய மகனை, எங்கள் தகப்பனார் எங்கள் புஞ்சையில் ‘வாங்கித்திங்க’
பருத்திச்சுளை எடுத்தான் என்றதுக்கு ஊணுக்கம்பால் அடி நொறுக்கி எடுத்து
விட்டார். பையனைக் கட்டிலில் வைத்து எடுத்துக்கொண்டு வந்து அவனுடைய வீட்டில் கிடத்தியிருக்கிறார்கள். சுந்தரத்தேவன் வெட்டரிவாளை எடுத்துக்கொண்டு வந்து எங்கள் வீட்டை நோக்கிப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறான். விஷயம் இதுதான். ரங்கையா போய் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை அவன்.

நாச்சியாரம்மா சுந்தரத்தேவன் வீட்டை நோக்கிப் போனாள். அவள் அங்கு போயிருப்பாள் என்று நாங்கள் முதலில் நினைக்கவில்லை; பிறகுதான் தெரியவந்தது.

அங்கு அவள் போனபோது ஒரே கூட்டம். அழுகைச் சத்தம். நாச்சியாரம்மா நுழைந்ததும் பரபரப்பு உண்டானது. பெண்கள் பணிவாக வழிவிட்டு விலகி நின்றனர். அடிப்பட்ட சிறுவ்னை அந்தக் கட்டிலிலேயே கிடந்த்தியிருந்தது. இரத்த உறவு கொண்ட பெண்கள் ஓவென்று அழுதுகொண்டிருந்தார்கள். சிறுவனின் தாய் கதறியது உள்ளத்தை உலுக்குவதாக இருந்தது. நாச்சியாரம்மா சிலையானாள். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. அவள் சுந்தரத்தேவனை ஏறிட்டுப் பார்த்தாள். பின்பு கட்டிலின்
சட்டத்தில் உட்கார்ந்தாள். தன் முந்தானையாள் கண்ணீரை ஒத்திக்கொண்டு
அச்சிறுவனின் இரத்தம் உறைந்த முகத்தைத் துடைத்தாள். சுந்தரத்தேவன் கட்டிலின்
பக்கத்தில் நெருங்கி அரிவாளைத் தரையில் ஊன்றி ஒற்றைக் கால் மண்டியிட்டு
உட்கார்ந்துகொண்டு இடது முழங்கையைக் கட்டிலின் சட்டத்தில் ஊன்றி முகத்தில்
ஐந்து விரல்களால் விரித்து மூடிக்கொண்டு ஒரு குழந்தைபோல் குமுறி அழுதான்.

நாச்சியாரம்மா சிறுவனை மூர்ச்சை தெளிவித்தாள். வீட்டிலிருந்த புளித்த மோரை
வருத்திச் சிறிது கொடுத்துத் தெம்பு உண்டாக்கினாள். மஞ்சணத்தி இலைகளைப்
பறித்துக்கொண்டு வரச் சொன்னாள். அதை வதக்கித் தன் கையாலேயே ஒத்தடம் கொடுத்தாள்.

சுவரொட்டி இலைகளை வாட்டிப் பக்குவப்படுத்திக் காயங்களைக் கட்டினாள். பின்பு
வீட்டுக்கு வந்து, பத்துப் பக்கா நெல் அரிசியும், இரண்டு கோழிகளையும்
கொடுத்தனுப்பினாள். நாங்கள் ஊமைகளைப்போல் ஒன்றுமே பேசாமல் அவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தோம்.

எங்கள் தகப்பனாரோ, இப்பொழுதுதான் ஒன்றுமே நடக்காதது போல் தலையில் கட்டிய
லேஞ்சியோடு நிம்மதியாக உட்கார்ந்து கொண்டு சுவர்நிழலில் சூரித்தட்டை
வீசிக்கொண்டிருந்தார். இடையிடையே வாயில் ஊறும் வெற்றிலை எச்சியை இரண்டு
விரல்களை உதட்டில் அழுத்திப் பதித்துக்கொண்டு பீச்சித் துப்புவார். அது
கம்மந்தட்டைகளையெல்லாம் தாண்டித் தூரப்போய் விழும்.

********

எல்லாப் பெண்களையும்போல் நாச்சியாரம்மாவுக்கும் ஒருநாள் கல்யாணம் நிச்சயமானது. அந்தக்காலத்துப் பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் நிச்சயமானவுடன் அழுவார்கள். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று இன்றுவரைக்கும் நான் யாரிடமும் காரனம் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், அதில் ஒரு ‘தேவ ரகஸியம்’ ஏதோ இருக்கிறது என்று மட்டும் நிச்சயம். நாச்சியாரம்மாவும் ஒரு மூணுநாள் உட்கார்ந்து கண்ணீர் வடித்து ‘விசனம்’ காத்தாள்.

வழக்கம்போல் மூன்றுநாள் கல்யாணம். அந்த மூன்று நாளும் அவள் ‘பொண்ணுக்கு இருந்த’ அழகைச் சொல்லிமுடியாது. கல்யாணம் முடிந்த நாலாம்நாள் அவள் எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து மறுவீடு போகிறாள். சுமங்கலிகள் அவளுக்கு ஆரத்தி எடுத்தார்கள். ஆரத்தி சுற்றிக்கொண்டே அவர்கள் பாடினார்கள். அந்தப் பாடலின்
ஒவ்வொரு கடேசி அடியும் கீழ்க்கண்டவாறு முடியும்-

*‘மாயம்ம லக்‌ஷ்மியம்ம போயிராவே...’
(எங்கள் தாயே லக்‌ஷ்மி தேவியே போய் வருவாய்)*

அந்தக் காட்சி இன்னும் என் மனசில் பசுமையாக இருக்கிறது. அவளை நாங்கள்
உள்ளூரில்தான் கட்டிக்கொடுத்திருக்கிறோம். ஐந்து வீடுகள் தள்ளித்தான் அவளுடைய
புக்ககம். அவளுக்கு நாங்கள் விடை கொடுத்து அனுப்புவது என்பதில்
அர்த்தமில்லைதான். ஆனால் ஏதோ ஒன்றுக்கு நிச்சயமாக விடை கொடுத்தனுப்பி
இருக்கிறோம்.

அந்த ஒன்று இப்பொழுது எங்கள் நாச்சியாரம்மாவிடம் இல்லை. அது அவளிடமிருந்துபோயே போய்விட்டது.

-----

2

ஆம் அது ரொம்ப உண்மை.

ராஜா அடிக்கடி சொல்லுவான். இப்பொழுதுதான் தெரிகிறது எனக்கு.

நான் நாச்சியாரம்மாவைக் கல்யாணம் செய்து அடைந்து கொண்டேன். ஆனால் அவளிடமிருந்து எதையோ பிரித்துவிட்டேன்.

அவள் இப்பொழுது ரெட்டிப்புக் கலகலப்பாக உண்மையாகவே இருக்கிறாள். என்
குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறாள். எங்கள் கல்யாணத்துக்கு முன்பு எனக்கு
இருந்த நாச்சியாரம்மாள்; இப்பொழுது இருக்கும் என் நாச்சியாரம்மாள்; நான் அந்த
அவளைத்தான் மிகவும் நேசிக்கிறேன்.

இப்பொழுது மூணு குழந்தைகள் எங்களுக்கு, தொடர்ந்த பிரசவம். இது அவளைப்
பாதித்திருப்பது உண்மைதான். குழந்தைகளையும், குடும்பத்தையுமே சதா கவனிக்கும்
சுயநலமி ஆகிவிட்டாள்.

எங்கோ ஓர் இடத்தில் கோளாறாகிவிட்டது. சந்தேகமே இல்லை. ஓய்வு ஒழிச்சலில்லாமல் முன்னைவிடப் பலமடங்கு அவள் இப்பொழுது உடைக்கிறாள். உழைத்து ஓடாய்த் தேய்ந்து வருகிறாள் என்னவள். ஒருநாளில் அவள் தூங்குகிற நேரம் மிகவும் அற்பம். என்ன பொறுமை, என்ன பொறுமை!

குழந்தைக்கு முலையூட்டிவிட்டு விலகிய மாராப்பைக்கூடச் சரி செய்து கொள்ளாமல்
தூளியில் இட்டு ஆட்டும் இந்த இவளா அவள்?

ஏகாலிக்கும், குடிமகளுக்கும் சோறுபோட எழுந்திருக்கும்போது முகம் சுளிக்கிறாள்.
குழந்தைக்குப் பாலூட்டும்போதோ, அல்லது தான் சாப்பிட உட்காரும்போதோ
பார்த்துத்தான் அவர்கள் சோறு வாங்கிப் போக வருகிறார்கள் தினமும் என்று புகார்
செய்கிறாள். பிச்சைக்காரர்களுக்கு ‘வாய்தாப்’ போடுகிராள். வேலைக்காரகளின்மேல்
எரிந்து விழுகிராள். ‘அப்பப்பா என்ன தீனி தின்கின்றான்கள் ஒவ்வொருத்தரும்’
என்று வாய்விட்டே சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.

குடுகுடுப்பைக்காரன் இப்பொழுதெல்லாம் அட்டகாசமாக வந்து எங்கள் தலைவாசலில்
வெகுநேரம் புகழ்வதில்லை. பெருமாள் மாட்டுக்காரன் தன் மாட்டுக்கு
கம்மஞ்சோற்றையும் பருத்திக்கொட்டையையும் தவிட்டையும் கலந்து வைக்கும் அந்த ‘நாச்சியார்’ எங்கே போனாள் என்று தேடிக்கொண்டிருக்கிறான்.

கல்யாணத்துக்கு முன் நாச்சியாரு, நின்ற கண்ணிப்பிள்ளை சேகரித்து மெத்தைகள்,
தலையணைகள் தைப்பாள். மெத்தை உறைகளிலும் தலையணை உறைகளிலும் பட்டு நூலால்
வேலைப்பாடுகள் செய்வாள். அவள் தனியாக உட்கார்ந்துகொண்டு நிம்மதியாகவும்
நிதானமாகவும் யோசித்து யோசித்துச் செய்யும் அந்தப் பின்னல் வேலைகளில், தன்
கன்னிப் பருவத்தின் எண்ணங்களையும் கனவுகளையுமே அதில் பதித்துப் பின்னுவதுபோல் தோன்றும். இடையிடையே அவளுக்குள் அவளாகவே குறுநகை செய்து கொள்வாள். சில சமயம் வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பார்வை எந்தப் பொருள்பேரிலும் படியாமல் ‘பார்த்து’க்கொண்டே இருப்பாள். அப்புறம் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மீண்டும் தையலில் மூழ்குவாள்.

ஒருநாள் நாச்சியாருவின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனக்கு ஒரு புதிய ஏர்வடம்
தேவையாக இருந்தது. அவர்களுடைய வீட்டில் அப்பொழுது களத்து ஜோலியாக எல்லாரும் வெளியே போயிருந்தார்கள். அடுப்பங்கூடத்தை ஒட்டி ஒரு நீளமான ஓடு வேய்ந்த கட்டிடம். அதில் ‘குறுக்க மறுக்க’ நிறையக் குலுக்கைகள். குதிரைவாலி,
நாத்துச்சோளம், வரகு, காடைக்கண்ணி முதலிய தானியங்கள் ரொம்பி இருக்கும். புதிய
ஏர் வடங்கள் ஓட்டின் கைமரச் சட்டங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது.
தொங்கிய கயிறுகளுக்கு மத்தியில், மண் ஓட்டில் ஓட்டை போட்டுக்
கோர்த்திருந்தார்கள். ஏர்வடத்தைக் கத்தரிக்கக் கயிறு வழியாக இறங்கி மண்
ஓட்டுக்கு வந்ததும் எலிகள் கீழே விழுந்துவிடும். ஆள் புழக்கம் அங்கு
அதிகமிராததால் தேள்கள் நிறைய இருக்கும். பதனமாகப் பார்த்துக் குலுக்கை மேல் ஏறி நின்றேன். மத்தியான வெயிலால் ஓட்டின் வெக்கை தாள முடியாததாக இருந்தது.
தற்செயலாக மறுபக்கம் திரும்பிப் பார்த்தேன். அங்கே தரையில் நாச்சியாரு ஒரு
தலைப்பலகையை வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்! மார்பின்மீது விரித்துக்
கவிழ்க்கப்பட்ட ’அல்லி அரசாணி மாலை’ப் புத்தகம். பக்கத்தில் வெங்கலப்
பல்லாங்குழியின் மீது குவிக்கப்பட்ட சோழிகள். ஜன்னலில் ஒரு செம்பு, பக்கத்தில்
ஒரு சினுக்குவலி, இரண்டு பக்கமும் பற்கள் உள்ள ஒரு மரச்சீப்பு, ஒரு ஈருவாங்கி,
ஒரு உடைந்த முகம்பார்க்கும் கண்ணாடி முதலியன இருந்தன. அவள் அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தாள். பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில்
பால்நுரைமீது பால் பீச்சும்போது ஏற்படும் சப்தத்தைப்போல் மெல்லிய குறட்டை ஒலி.
அவள் தூங்கும் வைபவத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அடர்ந்த நீண்டு வளைந்த ரெப்பை ரோமங்களைக் கொண்ட மூடிய அவள் கண்கள் அவ்வளவு அழகாய் இருந்தது. மெதுவாக இறங்கிப் போய் அந்த மூடிய கண்களில் புருவத்துக்கும் ரெப்பை ரோமங்களுக்கும் மத்தியில் முத்தமிட வேண்டும்போல் இருந்தது.

சொல்லி வைத்ததுபோல் நாச்சியாரு கண்களைத் திறந்தாள். தூக்கத்தினால் சிவந்த
விழிகள் இன்னும் பார்க்க நன்றாக இருந்தது. குலுக்கைமேல் இருந்த என்னை அதே கணம் பார்த்துவிட்டாள். ‘இது என்ன வேடிக்கை?’ என்பதுபோல் சிரித்துப் பார்த்தாள்.
அவள் எழுந்த வேகத்தில் புஸ்தகம் அவளுடைய காலடியில் விழுந்தது. விழுந்த
புஸ்தகத்தைத் தொட்டு வேகமாக இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு அதை எடுத்து ஜன்னலில் வைத்தாள். பின்பு லஜ்ஜையோடு சிரித்துத் தலைகவிந்துகொண்டே, நழுவும் மார்பு சேலையை வலதுகையினால் மார்போடு ஒட்ட வைத்துக்கொண்டு மெதுவாக அந்த இடத்தை விட்டு நழுவினாள்.

கல்யாணத்துக்கு முன்பிருந்தே நாங்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். யாரும் அறியாமல் தொலைவில் இருந்துகொண்டே ரகசியமாக ஒட்டிப் பழகினோம். இதயங்கள் அப்படி ஒன்றி ஊசலாடின. பேசாத ரகசியங்கள்தான் எங்களுக்குள் எத்தனை!

எனக்கு என்னென்ன சௌகரியங்கள் வேண்டுமென்று நான் உணர்த்தாமலே அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆச்சரியப்படும்படி அவைகள் செய்து முடிக்கப்பட்டிருக்கும் அப்போது.

********

ஒரு நாள் கோவில்பட்டியிலிருந்து ராத்திரி வந்தேன். அன்று வீட்டிற்கு நிறையச்
சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது. காலம் முன்னைமாதிரி இல்லை. ஒரும்பாகிவிட்டது.
முன்னெல்லாம் கொஞ்ச ரூபாயில் நிறையச் சாமான்கள் வாங்கிக்கொண்டு வரலாம். இப்போதோ நிறைய ரூபாய்கள் கொண்டுபோய் கொஞ்ச சாமான்களையே வாங்கமுடிகிறது.

வந்ததும் வராததுமாய்ச் சாமான்களையெல்லாம் வண்டியிலிருந்து இறக்கி
வைத்துவிட்டுப் பணப்பையையும் கச்சாத்துகளையும் நாச்சியாருவிடம் கொடுத்துவிட்டு அப்படியே வந்து கட்டிலில் வீழ்ந்தேன். உடம்பெல்லாம் அடித்துப்போட்டதுமாதிரி வலி. கண்கள் ஜிவ்வென்று உஷ்ணத்தைக் கக்கிக்கொண்டிருந்தது. மண்டைப் பொருத்தோடுகளில் ஆக்ரா இறக்கியது போல் தெறி. கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டேன். குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. அரிக்கன் லாம்பை சரியாகத் துடைத்துத் திரியைக் கத்தரித்து விடாததாலோ என்னவோ சுடர் பிறைவடிவில் எரிந்துகொண்டிருந்தது. சிம்னியில் புகைபிடிக்க ஆரம்பித்திருந்தது.

அந்த வெளிச்சத்தில் அவள் கச்சாத்துக்களிலிருந்த தொகைகளைக் கூட்டிக்கொண்டும்,
மீதிப்பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொண்டுமிருந்தாள்.

கணக்கில் ஒரு ஐந்து ரூபாய் சொச்சம் உதைத்தது. அந்த ரூபாய்க்கான கணக்கு என்ன
என்று என்னிடம் கேட்டாள்.

’எல்லாத்தையும் எடுத்துவை

கணக்கு எங்கெயும் போய்விடாது;

காலையில் பாத்துக்கலாம், எல்லாம்.’

அவள் பிடிவாதமாகக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

எனக்கு கண்களைத் திறக்க முடியவில்லை. மூடிக்கொண்டே இருக்கவேண்டும்போல்
இருந்தது. என்னுடைய நெற்றி ஒரு இதமான விரல்களின் ஒத்தடத்துக்கு ஏங்கியது.
மூக்கு மயிர் கருகும்படியான உஷ்ணக்காற்றை நான் வெளிவிட்டுக் கொண்டிருந்தேன்.
நல்ல உயர்ந்த காய்ச்சல்.

சூழ்நிலையின் பிரக்ஞை வட்டம் சுருங்கிக்கொண்டே வந்தது. சின்ன, மெல்லிய
சப்தங்கள்கூடக் கோரமாகக் கேட்டன. கண்களைத் திறந்து நாச்சியாரு என்ன செய்கிறாள் என்று திரும்பிப் பார்த்தேன். அவள் ரூபாய் அணா பைசாவில் மூழ்கியிருந்தாள்.

குளிர்ந்த காற்றுப்பட்டதால் கண்கள் நீரை நிறைத்தன, துடைத்துக்கொள்ளக் கையை
எடுக்க இஷ்டமில்லை. அதை இமைகளாலேயே மூடி வெளியேற்றினேன். மீண்டும்
நாச்சியாருவையே பார்த்தேன். அவளுடைய ரவிக்கையின் அவிழ்க்கப்பட்ட முடிச்சு
முடியப்படாமலே தொங்கின. கூந்தல் வாரிச் சேர்க்கப்படாததால் கற்றைகள்
முன்முகத்தில் வந்து விழுந்து கிடந்தன.

என்ன ஆனந்தமான ‘சொகம்’ இந்தக் கண்களை மூடிக்கொண்டே இருப்பதினால்! கானல்
அலைகளைப்போல் என் உடம்பிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் உஷ்ண அலைகள் கண்ணால் பார்க்கமுடியாமலிர்ந்தாலும் தெரிந்தது. நான் எரிந்துக்கொண்டிருக்கும் ஒரு
சிதைக்குள் படுத்திருப்பதுபோல் குளிருக்கு அடக்கமாக இருந்தது. உயர்ந்த
காய்ச்சலின் போதை இடைவிடாது மீட்டப்படும் சுருதிபோல் லயிப்பு மயமாக இருந்தது.

இந்த ஆனந்தத்தில் பங்குகொள்ள எனக்கு ஒரு துணைவேண்டும்போல் இருந்தது. அவள் எங்கே? அவள்தான்; என் அருமை நாச்சியாரு.

‘நாச்சியாரு, என் பிரியே! நீ எங்கிருக்கிறாய்?’

********

அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை

அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமே நெஞ்சைக்
குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து கொண்டிருந்தாள்.
புரிந்து கொள்ளும் வயதில்லை எனக்கு. நான்கு வயது.

ambai2 விடிகாலையில் கண் விழிக்கிறேன். ஏதோ தமுக்கு மாதிரி சத்தம் கேட்கிறது. கதவருகே சென்று பார்க்கிறேன். கல்யாணியைப் பலகையில் உட்கார்த்தி இருக்கிறார்கள். எதிரே எவனோ கொத்து இலையோட நிற்கிறான். ஆ ஊ வென்று சில மாதங்கள் மட்டுமே சிரிப்புக் காட்டிய தம்பிப் பாப்பா நான் இருந்த அறையிலேயே தொட்டிலில் இருக்கிறான்.

"நீரஜாட்சீ, போய்க் கொண்டு வா" என்கிறார்கள் யாரோ.

நான் அம்மாவைப் பார்க்கிறேன்.

கருநீலப் புடவை நினைவில் இருக்கிறது. தலைமயிரை முடிந்து கொண்டிருக்கிறாள். என்
அறையை ஒட்டிய சின்ன அறையில் அம்மா நுழைகிறாள். தலைப்பை நீக்குகிறாள். கையில் இருந்த சிறு கிண்ணியில் மெல்ல தன் மார்பிலிருந்து பால் எடுக்கிறாள். கண்களில் நீர் கொட்டுகிறது.

விடிகாலை இருட்டோடு புதைக்கப்பட்டிருக்கும் தவலைக்கு அடியில் விறகு வைத்து
வெந்நீர் காய்ச்ச அம்மா எழுந்திருக்கிறாள் தினமும்.

ஒருநாள் நான் அவளைப் பார்க்கிறேன். அம்மாவின் தலைமயிர் முடிச்சவிழ்ந்து
தொங்குகிறது. குந்தி உட்கார்ந்திருக்கிறாள் அம்மா. கூந்தல் பாதி கன்னத்திலும்
பாதி காதின் மேலும் விரிந்து கிடக்கிறது. அடுப்பு பற்றிக் கொண்டதும் குனிந்து
பார்த்த அம்மாவின் பாதி முகத்தில் தீயின் செம்மை வீசுகிறது. அன்று அம்மா
சிவப்புப் புடவை வேறு உடுத்தியிருக்கிறாள். உற்றுப் பார்த்துக் கொண்டே
இருக்கையில் 'டக்'கென்று அவள் எழுந்து நிற்கிறாள். கூந்தல் முட்டுவரை
தொங்குகிறது.

விலகியிருந்த தலைப்பினூடே ஊக்குகள் அவிழ்ந்த ரவிக்கை அடியே பச்சை நரம்போடிய வெளேரென்ற மார்பகங்கள் தெரிகின்றன. எங்கிருந்தோ பறந்து வந்து அங்கே நின்ற அக்கினியின் பெண்ணாய் அவள் தோன்றுகிறாள். அவள் அம்மாவா? அம்மா தானா?

"காளி காளி மகா காளி பத்ர காளி நமோஸ்துதே" என்ற ஸ்லோகம் ஏன் நினைவிற்கு
வருகிறது?

"அம்மா.."

அம்மா தலையைத் திருப்பிப் பார்க்கிறாள்.

"இங்கே என்ன செய்யறாயடீ?"

பேச முடியவில்லை. உடம்பு வியர்க்கிறது.

வீட்டில் ஹோமம் நடக்கிறது. அம்மாவின் உதட்டின் சிவப்பாலோ, குங்குமத்தின்
தீட்சண்யத்தாலோ கொழுந்து விட்டெரியும் ஜ்வாலையின் பிம்பம் அவளாகப் படுகிறது.
"அக்னியே ஸ்வாஆஆஹா.." என்று ஸ்வாஹாவை நீட்டி முழக்கி நெருப்பில் நெய்யை
ஊற்றுகிறார்கள். அந்த "ஸ்வாஹாஆ.." வின்போது பார்வை நெருப்பின் மீதும் அம்மாவின் மீதும் போகிறது.

எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டுகிறாள் அம்மா. புடவையைத் தூக்கிச்
செருகியிருக்கிறாள். வெளுப்பாய், வழவழவென்று துடை தெரிகிறது. குனிந்து
நிமிரும்போது பச்சை நரம்போடுகிறது.

"அம்மா நீ மாத்திரம் ஏம்மா இவ்வளவு வெளுப்பு? நான் ஏம்மா கருப்பு?"

சிரிப்பு.

"போடி உன் அழகு யாருக்கு வரும்?"

நிகழ்ச்சிகளில் ஒரு சம்பந்தமுமில்லை. அம்மா தான் அவற்றின் ராணி. அசுத்தங்களை
எரித்துச் சுத்திகரிக்கும் நெருப்பு அவள். ஒரு சிரிப்பில் மனத்தில் கோடானுகோடி
அழகுகளைத் தோரணமாட வைப்பவள் அவள். சிருஷ்டி கர்த்தா. அவள் மடியில் தலை வைத்துப் படுக்கும் போது நீண்ட மெல்லிய தண்ணென்ற விரல்களால் தடவி, "உனக்கு டான்ஸ் கத்துத் தரப் போறென். நல்ல வாகான உடம்பு" என்றோ, "என்ன அடர்த்தியடி மயிர்" என்றோ சர்வ சாதாரணமான ஒன்றைத் தான் சொல்வாள். ஆனால் மனத்தில் குல்லென்று எதுவோ மலரும்.

அம்மாவைப் பற்றிய இத்தகைய உணர்வுகளை அம்மாவே ஊட்டினாளா, நானே நினைத்தேனா தெரியவில்லை. என்னுள் பல அழகுகளுக்கு விதை ஊன்றியபோது தன்னுள் அவள் எதை ஸ்தாபித்துக் கொண்டாளோ தெரியவில்லை.

அப்போது பதிமூன்று வயது. பாவாடைகள் குட்டையாகப் போக ஆரம்பித்து விட்டன. அம்மா எல்லாவற்றையும் நீளமாக்குகிறாள்.

அம்மா மடியில் படுக்கும் மாலை வேளை ஒன்றில் எங்கோ படித்த வரிகள் திடீரென்று நினைவுவர அம்மாவைக் கேட்கிறேன்.

"அம்மா பருவம்னா என்னம்மா?"

மெளனம்.

நீண்டநேர மெளனம்.

திடீரென்று சொல்கிறாள்.

"நீ இப்படியே இருடீம்மா பாவாடைய அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு..."

சித்தி பெண் ராதுவைப் பெண் பார்க்க வருகிறார்களாம். அம்மா போய் விடுகிறாள்
அங்கே. அந்த முக்கியமான நாளில் அம்மா இல்லை. கல்யாணி தான் தீபாவளி அன்று
எண்ணெய் தேய்த்துத் தலை மயிரை அலசி விடுகிறாள். குளியலறையின் ஜன்னல் வழியாக இருள் கலையாத வானம் தெரிகிறது.

"கல்லுஸ்.. ரொம்ப சீக்கிரம் எழுப்பிட்டேடீ, பட்டாசு சத்தமே கேக்கலயே இன்னும்"

"உனக்கு எண்ணை தேய்ச்சுட்டு நானும் தேய்ச்சுக்க வேண்டாமா? வயசு பதிமூணு ஆறது.
எண்ணை தேய்ச்சுக்க வராது உனக்கு. குனிடீ"

கல்யாணிக்கு பொறுமை கிடையாது. தேங்காய் நாரை உரிப்பது போல் தலையை வலிக்க வலிக்கத் தேய்க்கிறாள் கல்யாணி.

கத்தரிப்பூ ஸாடின் துணியில் அம்மா எனக்குப் பாவாடை தைத்திருக்கிறாள் அந்த
தீபாவளிக்கு. வழுக்கிக் கொண்டு தையல் மிஷினில் ஓடும்போதே மனம் ஆசைப்பட்டது.
அந்த முறை அளவு எடுத்து பாவாடை தைத்தாள் அம்மா.

"அளவு எடுக்கணும் வாடீ.. ஒசந்து போய்ட்டே நீ" அளவு எடுத்துவிட்டு நிமிர்கிறாள்.

"ரெண்டு இஞ்ச் பெரிசாய்டுத்து இந்தப் பொண்ணு"

கத்தரிப்பூ ஸாடின் பாவாடை மற்ற பாவாடைகள் மாதிரி குட்டையாக இருக்காது.
வழுக்கிக் கொண்டு தரையை எட்டும்.

உலுக்கென்று எழுப்பி நிற்க வைத்துத் தலையத் துவட்டுகிறாள் கல்யாணி. ஷிம்மீஸை
மாட்டிக் கொண்டு பூஜை அறைக்கு ஓட்டம். பலகை மேல் அடுக்கியிருந்த புதுத்
துணிகளில் அப்பா என்னுடையதைத் தருகிறார்.

"இந்தாடி கறுப்பி..." அப்பா அப்படித் தான் கூப்பிடுவார்.

அப்பா அப்படிச் சொல்லும் போது சில சமயம் கூடத்தில் ஹா வென்று தொங்கும் கண்ணாடி முன் நின்றுகொண்டு பார்ப்பேன். அம்மா, காதில் "எத்தனை அழகு நீ" என்று
கிசுகிசுப்பதைப் போல் இருக்கும்.

சரளா வீட்டில் உள்ள கண்ணாடிப் பெட்டியில் உள்ள மீன் மாதிரி வழுக்கிக் கொண்டு
போகிறது பாவாடை. வெல்வெட் சட்டை. பொட்டு இட்டுக் கொண்டு அப்பா முன் போகிறேன்.

"அட பரவாயில்லையே!" என்கிறார் அப்பா.

பட்டாஸை எடுத்து முன் அறையில் வைத்து விட்டு சண்பக மரத்தில் ஏற ஓடுகிறேன்.
நித்தியம் காலையில் சண்பக மரத்தில் ஏறிப் பூப்பறிப்பது ஒரு வேலை. பூக்குடலையில் பூ நிரப்பி அம்மாவிடம் தந்தால், "கொள்ளை பூ" என்று கண்களை விரித்து அம்மா தன் விரல்களை அதில் அளைய விடுவாள். விரல்களே தெரியாது.

ஸாடின் பாவாடை வழுக்குகிறது. உச்சாணிக் கொம்பில் ஏற முடியவில்லை. இருட்டு வேறு. இறங்கும் தறுவாயில் படேர் என்று வெடிக்கிறது யார் வீட்டிலோ ஒரு பட்டாஸ். உடம்பு நடுங்க மரத்திலிருந்து ஒரு குதி. வீட்டினுள் ஓட்டம். மூச்சு வாங்குகிறது.

ஆசுவாசப்படுத்திக் கொண்டு முன் அறைக்கு ஓடி என் பங்குப் பட்டாஸை வெடிக்கிறேன். அப்புறம் தான் பூக்குடலை நினைவு வருகிறது. விடிந்திருக்கிறது. பாவாடையைத் தூக்கிப் பிடித்தவாறே மரத்தினடியில் கிடந்த பூக்குடலையை எடுக்கக் குனிகிறேன். பூக்கள் சில சிதறியிருக்கின்றன. நன்றாகக் குனிந்து எடுக்கும்போது பாவாடை தரையில் விரிகிறது. புதுப்பாவாடையில் அங்கும் இங்கும் கறைகள். மரம் ஏறியதாலோ?

"கல்லூஸ்.." என்று அழைத்தவாறே உள்ளே வந்து "பாவாடை எல்லாம்
அழுக்காக்கியுட்டேண்டி. அம்மா வைவாளா?" என்று கேட்டுக் கொண்டு பூக்குடலையுடன்
அவள் முன் நிற்கிறேன். கல்யாணி ஒரு நிமிடம் வெறிக்கப் பார்த்துவிட்டு "அப்பா"
என்று கூவிக் கொண்டே போகிறாள்.

கல்யாணியின் பார்வை, பூக்குடலையைக் கூட வாங்காமல் அவள் உள்ளே ஓடியது எல்லாமாக மனத்தில் கம்பளிப் பூச்சி நெளிகிறது. ஸாடின் பாவாடையைப் பார்க்கிறேன். வெல்வெட் சட்டையைத் தடவிப் பார்க்கிறேன். ஒன்றும் ஆகவில்லையே?

பகவானே, எனக்கு ஒன்றும் ஆகவில்லையே? என்னை நானே கேட்டுக் கொள்ளும் போதே தெரிகிறது ஏதோ ஆகிவிட்டதென்று. எங்கும் பட்டாஸ் ஒலிகள் கேட்டவாறிருக்கின்றன. கையில் பிடித்த பூக்குடலையுடன் வேகமாக மூச்சு விட்டவாறு உடம்பு பதற உதடுகள் துடிக்க நிற்கிறேன். ஹோ வென்று அழுகை வருகிறது.

அம்மாவைப் பார்க்க வேண்டும். சின்னாளப்பட்டு உடுத்திய தோளில் தலையை அழுத்திப் பதித்துக் கொள்ள வேண்டும். "பயமா இருக்கே" என்று வெட்கமில்லாமல் சொல்லி அழ வேண்டும். அம்மா தலையைத் தடவித் தருவாள். என்னவோ ஆகிவிட்டதே பயங்கரமாக...

முறுக்குப் பிழிய வரும் மொட்டைப் பாட்டியை எங்கிருந்தோ கூட்டிக் கொண்டு
வருகிறாள் கல்யாணி. பாட்டி அருகில் வந்தாள்.

"என்னடீம்மா அழறே? என்னாய்டுத்து இப்போ? லோகத்துலே இல்லாதது ஆய்டுத்தா?"

பாட்டி சொன்னது ஒன்றும் புரியவில்லை. என் உணர்வு தான் எதையோ புரிந்து கொண்டு பயத்தில் சில்லிட்டதே ஒழிய அறிவுக்கு ஒன்றும் எட்டவில்லை. மனத்தின்
ஆழத்திலிருந்து ஆறாத தாகமாய்க் கிளம்பிய ஒரே ஒரு அழைப்பு... "அம்மா"..

ஐந்து வயதில் ஒருமுறை காணாமல் போய் விட்டதை மீண்டும் நினைக்கிறேன். பெரிய பூங்கா ஒன்றில் நீள் இருள் கவிவது தெரியாமல் நடக்கிறேன். திடீரென்று இருளும், மரங்களும், ஓசைகளும், அமைதியும் மனத்தில் பயத்தை உண்டாக்குகின்றன. அப்பா தான் தேடிப் பிடிக்கிறார். ஆனால் அம்மாவைப் பார்த்ததும் தான் அழுகை பீறிடுகிறது.

அம்மா பக்கத்தில் போட்டுக் கொள்கிறாள். தடவித் தருகிறாள். :ஒன்னும் ஆகலியே.
எல்லம் சரியாப் போயிடுத்தே" என்று மெல்லப் பேசுகிறாள். சிவந்த உதடுகள்
நெருப்புக் கீற்றாய் ஜ்வலிக்க தன் முகத்தை என் முகத்தின் மீது வைக்கிறாள்.

இப்போதும் எங்கேயோ காணாமல் போய் விட்டதைப் போல அடித்துக் கொள்கிறது. கீழே உட்கார்ந்து முட்டங்காலில் தலை பதித்து அழுகிறேன். எதுவோ முடிந்து விட்டது போல் தோன்றுகிறது. தியேட்டரில் 'சுபம்' காட்டிய பிறகு எழுந்து வெளியே வருவதைப் போல், எதையோ விட்டுவிட்டு வந்தாற் போல் தோன்றுகிறது. அந்தச் சமயத்தில் உலக
சரித்திரத்தில் எனக்கு ஒருத்திக்கு மட்டுமே அந்த துக்கம் சம்பவித்தது போல்
படுகிறது. அத்தனை துக்கங்களையும் வெல்வெட் சட்டை அணிந்த மெல்லிய தோள்கள் மேல் சுமையாய்த் தாங்குவது போல் அழுகிறேன்.

இருவருமாக இருந்த மாலை வேளைகளில் அம்மா இது பற்றி ஏன் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். மனத்தை வியாபித்த உணர்வு பயம் மட்டுமே. புதுச் சூழ்நிலையில் புது மனிதர்களிடையே உண்டாகும் சாதாரண பயம் அல்ல. பாம்பைக் கண்டு அலறும் மிரளலில் அரண்டு போய் வாயடைத்துப் போகும் பதைப்பு. மன மூலைகளிலெல்லாம் பயம் சிலந்தி வலைகளாகத் தொங்குகிறது.

வெளுத்த உதடுகள் பிளந்து கிடக்கப் பார்த்த உருவம் மனத்தில் தோன்றுகிறது. மண்டை கல்லில் மோதிவிட்டது. என் முன்னே மென் சிவப்பாய் வழுக்கையாய் நடந்து கொண்டிருந்த தலை திடீரென்று குகை வாயாய்த் திறந்து கரும்சிவப்பாய் ரத்தம் பீறிட்டு வந்தது. நிமிடத்தில் ரத்தம் தலையில் கொட்டியது. ரத்தத்தையே வெறித்துப் பார்த்தேன். சிவப்பு எங்கும் படந்து கண்களிலேயே பாய்ந்து ஓடுவது போல்
தோன்றியது. மனம் மீண்டும் மீண்டும் அரற்றியது. "ஐயோ எத்தனை ரத்தம், எத்தனை
ரத்தம்" வாயில் ஓசையே பிறக்கவில்லை. ரத்தப் படுக்கை. கிழவன் வாய் திறந்தது,
கண்கள் வெறித்துப் போனது, நெஞ்சில் துருத்திக் கொண்டு நிற்கிறது.

ரத்தம் எத்தனை பயங்கரமானது... உதடுகள் வெளூக்க.. கை கால்கள் அசைவற்றுப் போக..

அம்மா தேவை. இருட்டைக் கண்டு பயந்ததும் அணைத்து ஆறுதல் சொல்வது போல், இந்த பயத்திலிருந்து மீள அம்மா வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. அம்மா ஜில்லென்று கரத்தைத் தோளில் வைத்து, "இதுவும் ஒரு அழகுதான்" என்கக் கூடாதா?

"எழுந்திரேண்டீ ப்ளீஸ்.. எத்தனை நாழிடீ அழுவாய்?" என்னுடன் கூட உட்கார்ந்து
தானும் ஒரு குரல் அழுத கல்யாணி கெஞ்சுகிறாள்.

"அம்மா.."

"அம்மாதான் அடுத்த வாரம் வராளே. இப்போ தான் இதைப் பற்றி லெட்டர் போட்டேன்.
ராதுவுக்குப் பெண் பார்க்கிறது எல்லாம் முடிஞ்சப்புறம் வருவா. இப்போ நீ
எழுந்திருடீ. சுத்த தலைவேதனை." கல்யாணிக்கு கோபம் வர ஆரம்பிக்கிறது.

"எனக்கு என்னடீ ஆய்டுத்து?"

"உன் தலை மண்டை ஆய்டுத்து, எத்தனை தடவை சொல்லறது?

"இனிமே எல்லாம் நான் மரத்துலே ஏறக் கூடாதா?"

'நறுக்' என்று குட்டுகிறாள் கல்யாணி.

"தடிச்சி! அரை மணியா எழுந்திரு, பாவாடையை மாத்தறேன்னு கெஞ்சறேன். நீ கேள்வி வேற கேக்கறியா? அப்பா இவள் ரொம்பப் படுத்தறாப்பா" என்று அப்பாவுக்கு குரல்
கொடுக்கிறாள்.

அப்பா வந்து "அசட்டுத்தனம் பண்ணக் கூடாது. கல்யாணி சொல்றபடி கேக்கனும்"
என்கிறார்.

முறுக்குப் பாட்டி வேறு, "என்ன அடம்பிடிக்கிறாள்? எல்லாருக்கும் வர தலைவிதி
தானே" என்கிறாள், அப்பா போன பிறகு.

ஏழுநாட்கள். அம்மா வர இன்னும் ஏழு நாட்கள்.ராதுவைப் பெண் பார்த்த பிறகு.
இருட்டில் தடுமாறுவதைப் போல் ஏழு நாட்கள். அடுத்தகத்து மாமி, எதிர்வீட்டு மாமி
எல்லோரும் வருகிறார்கள் ஒருநாள்.

"தாவணி போடலயாடி கல்யாணி?"

"எல்லாம் அம்மா வந்தப்புறம் தான் மாமி. இது அடங்காப் பிடாரி. அம்மா சொன்னால்
தான் கேட்கும்"

"இனிமே எல்லாம் சரியாப் போய்டுவா. இனிமே அடக்க ஒடுக்கம் வந்துடும்"

"ஏன்?" இனிமேல் என்ன ஆகிவிடும்?

தாவணி ஏன் போட்டுக் கொள்ள வேண்டும்? அம்மா சொன்னாளே.. 'இப்டியே இருடீம்மா..
பாவாடைய அலைய விட்டுண்டு..' நான் ஏன் மாற வேண்டும்? யாருமே விளக்குவதில்லை.

பொம்மை போல் என்னை உட்கார்த்தி வைத்துப் பேசுகிறார்கள். அப்பா வந்தால்
தலைப்பைப் போர்த்திக் கொண்டு மெதுவாகப் பேசுகிறார்கள்.

ஐந்தாம் நாள் "நீயே எண்ணெய் தேய்ச்சிக்கோடி" என்னிடம் சுடச் சுட எண்ணையைக்
கிண்ணியில் ஊற்றிக் கொடுக்கிறாள் கல்யாணி.

இடுப்பின் கீழ் நீண்ட கூந்தலுடன் அழுதவாறே போராடிவிட்டு ஷிம்மீஸுடன் கூடத்துக்
கண்ணாடி முன் நிற்கிறேன்.

"இனிமே பாத்ரூமிலேயே டிரெஸ் பண்ணிக்கனும் தெரிஞ்சுதா" என்கிறார் அப்பா.

அப்பா போன பிறகு கதவைச் சாத்துகிறேன். ஷிம்மீஸைக் கழற்றிப் போடுகிறேன். கறுப்பு உடம்பை கண்ணாடி பிரதிபலிக்கிறது. முகத்தை விடச் சற்றே நிறம் மட்டமான தோள்கள், கைகள், மார்பு, இடை, மென்மையான துடைகளின் மேல் கை ஓடுகிறது. நான் அதே பெண் இல்லையா? அம்மா என்ன சொல்லப் போகிறாள்?

ஸ்கூல் யூனிபார்ம் போட்டுக் கொள்கிறேன். கதவைத் திறந்ததும் கல்யாணி வருகிறாள்.
"ஸ்கூல்லே ஏன் வரல்லேன்னு கேட்டா என்னடீ சொல்வே?"

கல்யாணியை வெறித்துப் பார்க்கிறேன். கூண்டிலிருந்து விடுபட்ட பட்சி போல்
குதூகலத்துடன் ஸ்கூலுக்கு கிளம்ம்பிக் கொண்டிருந்த வேகம் குறைகிறது.

"ஒன்னும் சொல்லவேண்டாம். சும்மா இரு"

அன்று கேம்ஸ் பீரியடில் விளையாடவில்லை. அகன்ற மரம் ஒன்றின் பின் மறைந்து
கொள்கிறேன். முன்பு ஒரு முறை அப்படி விளையாடாமல் இருந்திருக்கிறேன். மறுநாள்
காலை மிஸ். லீலா மேனன் வகுப்பில் "நேற்று விளையாடாத முட்டாள்கள் யார்?"
என்றாள். நான் எழுந்திருக்கவில்லை.

"நீ ஏன் எழுந்திருக்கவில்லை?" என்றாள்.

"நான் முட்டாள் இல்லையே மிஸ்" என்றேன். ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டில் எழுதி
விட்டாள் இம்பர்டினண்ட் என்று.

அன்று மிஸ்.லீலா மேனன் திட்டு பற்றிக் கூட மனம் பயப்படவில்லை. இப்போது எனக்கு ஆகியிருக்கும் ஒன்றைவிட வேறு எதுவும் எப்போதும் என்னை பாதிக்காது என்று படுகிறது. மரத்தடியே உட்கார்ந்து வழக்கம் போல எனிட் ப்ளைடன் படிப்பதில்லை. கீழே வெட்டப்பட்டிருந்த குழியில் உதிர்ந்தவாறிருக்கும் பழுத்த இலைகளிடம் நான் கேட்கிறேன். "எனக்கு என்ன தான் ஆகித் தொலைந்து விட்டது?"

கூண்டிலிருக்கும் கைதி நீதிபதியின் வாயைப் பார்ப்பது போல் அம்மாவின் சொல்
ஒன்றுக்காக மட்டுமே மனம் எதிர்பார்க்கிறது. கண்களைத் தாழ்த்தி என்னைப்
பார்த்தவாறே, "உனக்கு ஆகியிருக்கும் இதுவும் அழகு தான்" என்பாளா அம்மா?
பயமுறுத்திய முறுக்குப் பாட்டி, கல்யாணி எல்லோரையும் புன்னகையின் ஒரு
தீப்பொறியில் அவள் ஒதுக்கித் தள்ளி விடுவாள். அம்மா வித்தியாசமானவள். அவள்
நிற்கும் இடத்தில் வேண்டாதவை அழிந்து வெறும் அழகு மட்டுமே ஆட்சி செலுத்தும்.
அவளுக்கு எல்லாமே அழகு தான்.

அம்மா ரொம்பத் தேவையாக இருக்கிறாள். ஏதோ ஒன்று விளக்கப்பட வேண்டும். கத்தரிப்பூ ஸாடின் பாவாடையை நினைத்தாலே உடம்பு வியர்த்துப் போய் நடுங்குகிறதே. நாக்கு தடித்துப் போய் மரக்கட்டையாய் வாயில் லொட்டென்று படுத்து விடுகிறதே. திடீரென்று இருட்டு கவிந்து கொள்கிற மாதிரியும் திரும்பிப் பார்ப்பதற்குள் 'ணங்'கென்ற சத்தமும், ரத்தப் பெருக்கும் நீண்டு கட்டையாய்ப் போன உடலும் அந்த இருட்டில் தோன்றுவது போல இருக்கிறதே, அதை மென்மையான வார்த்தைகளால் யாராவது விளக்க வேண்டும்.

நான் யாருமே இல்லாமல் இருப்பது போல் உணர்கிறேன். தோட்டக்காரன் எழுப்பியபின்
மெல்ல வீட்டுக்குப் போகிறேன்.

"ஏண்டீ இவ்ளோ லேட்? எங்கே போனே?"

"எங்கேயும் போகல.. மரத்தடியிலே உட்கார்ந்திருந்தேன்"

"தனியாவா?"

"உம்"

"ஏண்டீ நீ என்ன இன்னும் சின்னப் பொண்ணா? ஏதாவது ஆகிவைத்தால்?"

ஸ்கூல் பையை விட்டெறிகிறேன். முகம் எல்லாம் சூடேறுகிறது. செவிகளைக் கையால் மூடிக் கொண்டு வீறிட்டுக் கத்துகிறேன்.

"நான் அப்படித்தஅன் உட்காருவேன். எனக்கு ஒன்னும் ஆகலை"

ஒவ்வொரு வார்த்தையையும் நீட்டி, அழுத்தி வெறிக்கத்தலாய்க் கத்துகிறேன்.
அப்பாவும் கல்யாணியும் அதிர்ந்து போய் நிற்கின்றனர். நான் கோபித்துக் கொண்டு
மொட்டை மாடிக்குப் போய் உட்காருகிறேன். சண்பக மரத்தின் வாசனையோடு அங்கேயே இருக்கலாம். கல்யாணியும் அப்பாவும் இங்கே வரக் கூடாது. நானும் சண்பக மர வாசனையும் மட்டுமே. ஒன்றும் பேசாத, தொடாத அந்த வாசனை வீட்டு மனிதர்களை விட நெருங்கிய ஒன்றாகப் படுகிறது. இவர்கள் பேசாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அம்மா மாதிரி விழிகளை விரித்துச் சிரிப்பு.

அம்மா அப்படி பார்த்தால் நெஞ்சினுள் ஏதோ செய்யும். வாய்விட்டு சிரிக்கத்
தோன்றும். பாடத் தோன்றும். அம்மா சிருஷ்டிப்பவள். ஆனந்தத்தை, உத்ஸாகத்தை, அழகை எல்லாம் தலையைத் திருப்பி ஒரு புன்னகையால் ஜாலம் செய்து வரவழைப்பவள்.

கல்யாணி மேலே வருகிறாள்.

"சாப்பிட வாடீம்மா சின்ன ராணி, அம்மா உன்னைச் செல்லம் கொடுத்து குட்டிச்
சுவராக்கிட்டா"

அலட்சியமாக உதட்டைப் பிதுக்கியவாறே எழுந்து கொள்கிறேன்.

மறுநாள் காலை அம்மா வருகிறாள். டாக்ஸியின் கதவைத் திறந்து கரும்பச்சைப்
பட்டுபுடவை கசங்கியிருக்க, அம்மா வீட்டிற்குள் வருகிறாள்.

"என்ன ஆச்சு?" என்கிறார் அப்பா.

"பொண்ணு கறுப்பாம். வேண்டாம்னுட்டான் கடங்காரன்"

"உன் தங்கை என்ன சொல்றா"

"வருத்தப்படறா பாவம்"

"நமக்கும் ஒரு கறுப்புப் பொண்ணு உண்டு"

மொட்டென்று அம்மா முன் போய் நிற்கிறேன். கல்யாணி லெட்டரில் எழுதியதை விட
விளக்கமாய் நானே சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. மெல்ல அவள் கழுத்துப்
பதிவில் உதடுகள் நடுங்க மென்குரலில் எல்லாவற்றையும் அரற்ற வேண்டும் போல்
படுகிறது. நெஞ்சில் நெளியும் பயத்தைக் கூற வேண்டும் என்று அடித்துக் கொள்கிறது.

ஏதோ மர்மமான ஒன்றை - இரவு படுத்துக் கொண்டதும் தொண்டையை அடைத்துக் கொள்ள வைக்கும் உணர்வை, என் உடம்பே எனக்கு மாறுதலாகப் படும் தவிப்பை - அம்மா விளக்கப் போகிறாள் மெல்ல என்று அவள் முகத்தையே பார்க்கிறேன். வாழைத்தண்டு போல் நீண்ட கரங்களால் அவள் என்னை அணைக்கப் போகிறாள். நான் அழப் போகிறேன் உரக்க. அம்மாவின் கூந்தலில் விரல்களைத் துளைத்துப் பெருத்த கேவல்களுடன் அழப் போகிறேன்.

அம்மா என்னைப் பார்க்கிறாள். நான் ஒரு கணம் அவள் கண்முன் ராதுவாய் மாறுகிறேனா என்று தெரியவில்லை.

"உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம்" சுளீரென்று
கேள்வி.

யாரைக் குற்றம் சாட்டுகிறாள்?

ஒலியில்லாக் கேவல்கள் நெஞ்சை முட்டுகின்றன.

அம்மாவின் உதடுகளும், நாசியும், நெற்றிக் குங்குமமும், மூக்குப் பொட்டும்,
கண்களும் ரத்த நிற ஜ்வாலையை உமிழ்வது போல் தோன்றுகிறது. அந்த நெருப்பில் அவள் மேல் போர்த்தியிருந்த தேவ ஸ்வரூபம் அவிழ்ந்து விழ நிர்வாணமான வெறும் மனித அம்மாவாய் அவள் படுகிறாள். அந்த ஈரமில்லாச் சொற்கள் பட்டாக் கத்தியாய் எழுந்து முன்பு முளைவிட்டிருந்த அத்தனை அழகுகளையும் குருட்டுத் தனமாக ஹதம் செய்கிறது. தீராத பயங்கள் கரும் சித்திரங்களாய் நெஞ்சில் ஒட்டிக் கொள்கின்றன.

அக்னியே ஸ்வாஆஆஹா... அசுத்தங்கள் மட்டும் எரிக்கப்படவில்லை. மொட்டுக்களும்
மலர்களும் கூட கருகிப் போயின.

******

காலமும் ஐந்து குழந்தைகளும்

அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம்
இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது.

ashokam ”ஹோல்டான்! ஹோல்டான்!” என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான். கைப்பெட்டி அவ்வளவு உபாதைப் படுத்தவில்லை. ஆனால் தோளிலிருந்து தொங்கிய கான்வாஸ் பைதான் பயங்கரமாக அங்குமிங்கும் ஆடி, அவனை நிலை தடுமாற வைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பையில் ஓர் அலுமினியத் தம்ளரை ஓர் ஓரத்தில் இடுக்கியிருந்தான். அது அவன் விலா எலும்பைத் தாக்கியவண்ணம் இருந்தது. பை பையாக இல்லாமல், ஓர் உருளை வடிவத்தில் உப்பிப்போயிருந்தது. அதனால் ஒரு கையைத் தொங்கவிட முடியாமல் ஓர் இறக்கை பொலத் தூக்கிக்கொண்டே ஓட வேண்டியிருந்தது. ஓர் இறக்கையுடன் ரெயில் பின்னால் ‘ஹோல்டான், ஹோல்டான்’ என்று கத்திக்கொண்டு போவது அவனுக்குப் பொருத்தமில்லாதது ஒன்றைச் செய்யும் உணர்வைக் கொடுத்தது. ஒற்றை இறக்கையுடன் பஸ் பின்னால் கத்திக்கொண்டு போவதாவது ஓரளவு சரியாக இருக்கும்.

பஸ்! பஸ்ஸால்தான் இந்த அவதி. அவன் வீட்டிலிருந்து ரெயில் நிலையம் போய்ச் சேர ஏன் பஸ்ஸில் ஏறினான்? மூட்டை இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்து, பெட்டியும் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் பஸ்ஸில் ரெயில் நிலையம் போய்ச் சேரலாம் என்று தோன்றியே இருக்காது. பஸ்ஸில் அவன் ஏறிய நேரத்தில் கூட்டம் அதிகம். ஒவ்வொரு ஸ்டாப்பிலும் பின் வழியாக ஆண்களும் முன்வழியாகப் பெண்களுமாகப் பிரயாணிகள் ஏறியவண்ணமே இருந்தார்கள். யாருமே டிக்கெட் வாங்குவதைப் பற்றிய எண்ணமே இல்லாததுபோலத் தோன்றினார்கள். அவர்கள் டிக்கெட் வாங்காதவரை கண்டக்டர் பஸ்ஸை நகரச் செய்வதாக இல்லை. இதில் நடுவில் சிறிது நேரம் மழைத் தூறல். சாலையில் ஒரே மாடுகள்; அல்லது மாட்டு வண்டிகள். பெருச்சாளி சந்து கிடைத்த மட்டும் தன் பெருத்த, தினவெடுத்த உடலை மந்த கதியில் வளைத்துப் போவதுபோல, பஸ் முன்னேறிக்கொண்டிருந்தது. பெருச்சாளி வயிற்றுக்குள் ஒற்றை இறக்கையை விரித்து நின்று கொண்டு அவன் ரெயில் நிலையம் அடைவதற்குள் அவன் வயிறு நிரந்தரமாகக் கழுத்தில் தங்கிவிட்டது. ரெயில் நிலையம் எங்கேயோ, ரெயில் நிலையத்தின் பெயரைச்
சொல்லி பஸ் நிற்கும் இடம் எங்கேயோ, அந்த இடத்திலிருந்து ஒற்றைச் சிறகுடன் ஒரு பர்லாங்கு ஓடி வந்தான். ஒரு பர்லாங்கா? ஒரு மைல் கூட இருக்கும்.

வழியில் பட்டாணி வண்டிக்காரன். வாழைப்பழம் விற்பவன். செருப்புத் ட் ஹைபவன். ஒரு குஷ்ட ரோகி. ஐந்து குழந்தைகளை வரிசையாகத் தூங்க வைத்துப் பிச்சை கேட்கும் ஒரு குடும்பம். ஐந்து குழந்தைகள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் எப்படித் தூங்க முடியும்? குழந்தைகளைக் கொன்று கிடத்தி விட்டார்களா? ஐயோ! இன்று கொன்று கிடத்திவிட்டால் நாளை? இல்லை குழந்தைகளை எப்படியோ தூங்கப்பண்ணி விட்டார்கள். மயக்க மருந்து கொடுத்திருப்பார்கள். ஆமாம், அதுதான். குழந்தைகள் நாக்கில் மாசிக்காயை அரைத்துத் தடவிவிட்டிருப்பார்கள். பாவம், குழந்தைகள்.

அப்புறம் மயக்கமுறாத குழந்தைகள் நொண்டிகளை சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறவன். முட்டாள், இப்படிச் சைக்கிளை நடைபாதையில் உருட்டிக்கொண்டு வந்தால் ஒற்றைச் சிறகுடன் ரெயிலைப் பிடிக்க ஓடும் ஜந்துக்கள் எங்கே போவது? அவனைச் சொல்ல உடியாது. அவன் சைக்கிளில் காற்று இறங்கியிருக்கும். விளக்கு இல்லாமல் இருக்கும். விளக்கு இல்லாமற்போனால் போலீஸ்காரன் பிடித்துப் போய் விடுவான். இதோ இப்போது ஒரு போலீஸ்காரன் எதிரே நிற்கிறான். நடை பாதைக்காரர்களை நிறுத்திவிட்டு வரிசையாக நான்கு லாரிகள் கடந்து செல்ல வழி கொடுத்திருக்கிறான். நான்கு லாரிகள். ஒவ்வொன்றும் பூதமாக இருக்கிறது. பூதங்களால் வேகமாகப் போக முடியாது. மிக மிகச் சாவதானமாகத்தான் அவற்றின் அசைவு. பூதங்கள் நினைத்தால் மாயமாக மறைந்துபோக முடியும். அலாவுத்தீனுக்காக ஒரு அரண்மனையை அதில் தூங்கும் அரசகுமாரியுடன் ஒரு கணத்தில் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடியும். ஆனால் ரெயிலுக்குப் போகும் அவனை ஒரு யுகம் அந்த நடைபாதையோரத்தில் நிறுத்திவைத்து விடும்.

ஆயிற்று, நிலையத்தை அடைந்தாயிற்று. ரெயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிஷம்
இருக்கிறது. டிக்கெட்டையாவது முன்னால் வாங்கித் தொலைத்திருக்கக் கூடாதா? நான்கு டவுன் புக்கிங்க் ஆபீஸ்கள். அங்கே டிக்கெட் கொடுப்பவர்கள் பகலெல்லாம்
வேலையில்லாமல் வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக்கொண்டு இருப்பார்கள். இவன் டிக்கெட் வாங்கப் போயிருந்தால் வெற்றிலை பாக்குப் போட்டு அரைப்பதிலிருந்து ஓர் இடைவெளி கிடைத்ததே என்று இவனுக்கு மிகுந்த நன்றியுடன் டிக்கெட் கொடுத்திருப்பார்கள். யாரோ சொன்னார்கள், ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் வாங்கிக்கொள்ளேன் என்று. யார் அந்த மடையன்? பக்கத்து வீட்டுத் தடியன். அந்த முட்டாள் சொன்னானென்று இந்த முட்டாளும், ‘எல்லாம் அப்புறம்
பார்த்துக்கொள்ளலாம்’ என்று இருந்துவிட்டான்.

இப்போது ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஏகக் கூட்டம். கியூ
வரிசை. எல்லாரும் வரிசையாகவே வந்து டிக்கெட் வாங்கிக்கொண்டு சில்லறை சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துப் போக வேண்டிய நிர்ப்பந்தம். ரெயிலைப் பிடிக்க வேண்டாமென்றால் கியூ வரிசையில் ஒழுங்காக நின்று, டிக்கெட் வாங்கிச் சில்லறை சரிபார்த்துக் கொண்டு போகலாம். ஒன்றுமே செய்ய வேண்டாமென்றால் எல்லாச் சட்ட திட்டங்களையும் ஒழுங்காக அநுசரித்துப்போய் நல்ல பிள்ளையாகப் பட்டினி கிடந்து சாகலாம். அந்த நடைபாதைப் பிச்சைக்காரக் குழந்தைகள்போல. அந்தக் குழந்தைகள் சாகாமல் இருக்க வேண்டும். பிச்சை வாங்கிச் சேகரித்துக் கொண்டிருக்கும் அந்த ஆண் பெண் இருவரும் அந்தக் குழந்தைகளின் அப்பா அம்மாவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமலும் இருக்கலாம். பிச்சைக்காரர்களுக்கு அப்பா ஏது? அம்மா ஏது? அப்பா அம்மா இல்லாமலும் இந்த உலகத்தில் இருக்க முடியுமா? அந்தக் குழந்தைகளுக்கு அவர்கள் அப்பா அம்மா இல்லை. எங்கெங்கேயோ கிடந்த ஐந்து குழந்தைகளைச் சேர்த்து
மயக்க மருந்து கொடுத்து நடைபாதையில் கிடத்தி அவர்கள் பிச்சை
எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கும் தின்ன ஏதாவது
கொடுப்பார்களா? கொடுக்க வேண்டும். அப்படித் தின்னக் கொடுக்காமல் எத்தனைக்
குழந்தைகள் அப்படி மயக்கத்திலேயே செத்துப் போய்விடுகின்றனவோ? அப்பா அம்மா
இருந்து இதோ இவன் மயக்கம்போடாமல் பிச்சைக்காகக் காத்திருக்கிறான். பிச்சையில்
ஒரு கூட்டந்தான், இதோ இந்த டிக்கெட் கொடுக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பது.
ரெயில் கிளம்ப இன்னும் ஓரிரு நிமிஷம் இருக்கும்.

இவன் டிக்கெட் வாங்குவதற்கும் அந்த நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது.
இப்போதுகூட ஓடிப்போய்ப் பிடித்து விடலாம். நல்ல வேளையாக மாடிப்படி ஏறி இறங்க வேண்டியதில்லை. அப்படியும் நூறு அடி தூரம் இருக்கும்போது வண்டி நகர
ஆரம்பித்துவிட்டது.

ஓடினான். பிளாட்பாரத்தில் உலகத்தில் இல்லாதது இல்லை. எல்லாம் கூடை கூடைகளாக, மூட்டைகளாக, இருந்தன. தகர டப்பாக்களாக. இவன் மோதிய ஒரு கூடை திடீரென்று கிருச் கிரீச்சென்று கத்திற்று. கோழிகள். கூடை கூடையாக உயிரோடு கோழிகள். கூடைக்குள் நகர முடியாதபடி அடைத்துவைக்கப்பட்ட கோழிகள். அவற்றினால் கத்தத்தான் முடியும். கூவ முடியாது. அதைத்தான் செய்தன, இவன் மோதியவுடன். அப்புறம் இந்தத் தபால்காரர்களின் தள்ளுவண்டி. வண்டியில் மலைமலையாகத் தபால் பைகள். புடைத்துப்போன தபால் பைகள். எவ்வளவோ ஆயிரம் பேர் எவ்வளவோ ஆயிரம் பேருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். நேரில் பார்த்துப் பேச முடியாததை எல்லாம் கடிதமாக எழுதியிருக்கிறார்கள். இவர்கள் நேரில் பார்த்தால்தான் எவ்வளவு பேச முடியப்போகிறது? கடிதத்தில், ‘இங்கு யாவரும் நலம். தங்கள் நலமறிய ஆவலாயிருக்கிறேன்’ என்று மறு சிந்தனை இல்லாமல் எழுதிவிடலாம். கடிதத்தில் அது ஒரு சௌகரியம்.

இப்படி ஓடிக்கொண்டே இருந்தால் ரெயிலைப் பிடித்து விட முடியுமா? முடியலாம்.
ரெயிலின் வேகம் குறைவாக இருந்து, தன் வேகம் அதிகமாக இருந்தால். ஆனால் ஒரு
சூத்திரத்தின்படி பின்னால் ஓடுகிறவன் முன்னே போவதை எட்டிப்பிடிக்க முடிவதில்லை. இருந்த போதிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த ரெயிலைப் பிடித்துவிட வேண்டும்.

“ஹோல்டான், ஹோல்டான்!” என்று கத்திக்கொண்டு ஒற்றைச் சிறகை விரித்துக்கொண்டு பையில் திணித்திருக்கும் அலுமினியத் தம்ளர் கணத்துக்கு ஒரு தரம் அவன் விலா எலும்பைத் தாக்க, அவன் ரெயில் பின்னால் ஓடினான். திடீரென்று பிளாட்பாரம் முழுக்கக் காலியாகப் போய்விட்டது. அவன் அந்த ரெயில் இரண்டுந்தான். இப்போது நிச்சயம் ஓடிப்போய்ப் பிடித்துவிடலாம். ஆனால் பெரிய முட்டுக்கட்டையாக ஒரு பெரிய உருவம் எதிரே நிற்கிறது. கடவுள்.

“தள்ளி நில்லுங்கள்! தள்ளி நில்லுங்கள்! நான் அந்த ரெயிலைப் பிடிக்க வேண்டும்.”

“அந்த ரெயிலையா?”

“ஆமாம்.அதைப் பிடித்தால்தான் நான் நாளைக் காலை அந்த ஊர்ப் போய்ச் சேருவேன். நாளைக் காலை அந்த ஊர்ப் போய்ச் சேர்ந்தால்தான் நாளை பத்து மணிக்கு அந்த இண்டர்வியூவுக்குப் போக முடியும். தள்ளி நில்லுங்கள்! தள்ளி நில்லுஙகள்!”

”வேலை கிடைத்துவிடுமா?”

“வேலை கிடைக்க வேண்டும். வேலை கிடைத்தால்தான் நான் அந்த நடைபாதைக் குழந்தைகள் போல் சாகாமல் இருக்க முடியும். எனக்குப் பிறக்கும் குழந்தைகளை நான் நடைபாதையில் கிடத்தாமல் இருக்க முடியும். தள்ளிப் போங்கள்! தள்ளிப் போங்கள்!”

“நீ என்ன ஜாதி!”

“நான் என்ன ஜாதியாக இருந்தால் என்ன? நான் ஒரு சடங்கு, கர்மம் செய்வதில்லை.
பெரிதாக மீசை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். ஹோட்டலில் சென்று எந்த மிருகத்தின்
இறைச்சி கொடுத்தாலும் தின்கிறேன். சாராயம் குடிக்கிறேன். எனக்கு ஜாதி கிடையாது.
தள்ளிப் போங்கள்! தள்ளிப் போங்கள்!”

“நீ உனக்கு ஜாதி இல்லை என்பதற்காக அவர்கள் உனக்கு ஜாதி இல்லை என்று நினைக்கப் போகிறார்களா?”

“போ, தள்ளி! பெரிய கடவுள்.”

மீண்டும் ஒற்றைச் சிறகு, ஹோல்டான். அலுமினியத் தம்ளர். இந்தச் சனியன்
அலுமினியத் தம்ளரை வேறு இடத்தில் திணித்திருந்தால் என்ன? இப்போது நேரமில்லை.

இந்தத் தம்ளரே எதற்கு? தண்ணீர் குடிப்பதற்கு அல்ல; நாளை ஓரிடத்தில் உட்கார்ந்து
ஒழுங்காக சவரம் செய்துக்கொள்வதற்குத்தான். எது எப்படிப் போனாலும்
இண்டர்வியூவுக்கு முகச் சவரம் செய்துகொண்டு போக வேண்டும்! இந்தக் கடவுளுக்குத் தெரியுமோ எனக்கு வேலை கிடைக்காதென்று?

இன்னும் இரண்டடி எட்டிப் பிடித்தால் ரெயில். மெதுவாகத்தான்
போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் ஓர் அவதி; ரெயலின் கடைசிப் பெட்டியில் ஏறிக்
கொள்ள முடியாது. அது கார்டு வண்டியாக இருக்கும் முற்றும் மூடிய பார்சல்
பெட்டியாக இருக்கும். ஆதலாம் ரெயிலை எட்டிப் பிடித்தால் மட்டும் போதாது.
ஒன்றிரண்டு பெட்டிகளையும் கடந்து செல்ல வேண்டும். மீண்டும் கடவுள்.

”அட ராமச்சந்திரா! மறுபடியுமா?”

“ஏதோ உன்மேல் பரிதாபம். அதனால்தான்.”

“அப்படியானால் வண்டியை நிற்கச் செய்யும்.”

“நானா உன்னை வண்டி பின்னால் ஓடச் சொன்னேன்? ஒரு பத்து நிமிஷம் முன்னதாகவே கிளம்பியிருக்கக் கூடாது?”

“ஏதோ எல்லாம் ஆயிற்று. இனிமேல் என்ன செய்வது?”

“அப்போது அநுபவிக்க வேண்டியதுதான்.”

“இதைச் சொல்ல நீ எதற்கு? நான்தான் அநுபவித்துக் கொண்டிருக்கிறேனே. தள்ளி போம்”

இரண்டு முறை கடவுள் தரிசனம் ஆயிற்று. நேருக்கு நேராக. எத்தனை பக்தர்கள்,
எவ்வளவு முனிவர்கள் எவ்வளவு ஆண்டுக்காலம் எப்படியெல்லாம் படாதபாடு
பட்டிருக்கிறார்கள்! இல்லாத தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள்!
புதுமைப்பித்தனாவது வீட்டுக்கு அழைத்துப் போய் ஒரு வேளைச் சோறு போட்டார். நானோ தள்ளிப் போகச் சொல்லிவிட்டேன். கடவுள் என்றால் என்ன என்று தெரிந்தால்தானே?

இப்படி ஓடி ஓடியும் ஐந்து நிமிஷப் பத்து நிமிஷக் கால தாமதத்தில் எவ்வளவோ
தவறிப்போயிருக்கிறது. தவறிப் போவதற்கென்றே திட்டமிட்டு காரியங்களைத் தாமதமாகச் செய்ய ஆரம்பித்து அப்புறம் இல்லாத ஓட்டம் ஓடி, கடைசியில் என்ன ஓடினாலும் முடியாது என்று ஆகும் போது, “பார்! என் துரதிர்ஷ்டம்! பார், என் தலையெழுத்து!” என்று சொல்லச் சௌகரியமாக இருக்காது?

நாளையோடு இருபத்தைந்து முடிகிறது. இனி இந்த மாதிரி இடங்களில் உத்தியோகம்
எதிர்பார்க்க முடியாது. வேலை வாய்ப்பு என்பது நாளை என்பதால் அப்படியே
ஒன்றுக்குக் காலாகிவிடும். முழு வேலைவாய்ப்பில் படிப்பு முடிந்து இந்த ஆறு
வருஷங்களில் விட்டுவிட்டு எண்பத்தொரு நாட்களில் தினக்கூலி வேலை. ஒரு மாதம்
நான்கு நாட்கள் ஒரு பண்டாபீஸில் தற்காலிகமாக. அவ்வளவுதான். ஒரு வேளை
வேலைக்கென்று உண்மையாகவே தீவிரமாக முயற்சி செய்யவில்லையோ? முயற்சி.
விடாமுயற்சி. தீவிர முயற்சி. முயற்சி திருவினையாக்கும். முயற்சி திருவினை
ஆக்கும். பணக்காரன் ஆகலாம். பணம் வந்தால் ரெயில் நிலையத்துக்கு பஸ்ஸில் வர
வேண்டாம். ஒரு டாக்ஸியில் குறித்த நேரத்துக்கு வரலாம். ரெயில் பின்னால்
சிறகொடிந்த நெருப்புக்கோழிபோல ஓட வேண்டியதில்லை; அதுவும் “ஹோல்டான். ஹோல்டான்” என்று கத்திக்கொண்டு. இந்த ஹோல்டான் என்ற சொல்லே தரித்திரத்தின் குறியீடு.

நகர்ந்து கொண்டே இருக்கும் உலகத்தை ஹோல்டான் சொல்லி நிறுத்திவிட முடியுமா?
உலகம் நகர்ந்துகொண்டா இருக்கிறது? பயங்கரமான வேகத்தில் அண்ட வெளியில் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கிறது. அது மட்டும் அல்ல. இன்னும் ஆயிரக்கணக்கான,
கோடிக்கணக்கான அண்டங்கள், உலகங்கள், தலை தெறிக்கும் வேகத்தில் சீறிப் பாய்ந்து
கொண்டிருக்கின்றன. இத்தனை அண்ட சராசரஙக்ளைச் சிருஷ்டித்துவிட்டு அவற்றைக் கன வேகத்தில் தூக்கி எறிந்துவிட்டு இந்தக் கடவுள் என் முன்னால் நின்று நான்
ஓடுவதைத் தடுக்கிறது!

நான் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறேன்? ஒரு ரெயிலைப் பிடிக்க; இந்த ரெயில்
நிலையத்தில் பிளாட்பாரத்தில் நகர ஆரம்பித்துவிட்ட ஒரு ரெயிலைப் பிடிக்க. நான்
ரெயிலைப் பிடிக்க வேண்டும். அல்லது அது என்னை விட்டுப் போய்விட வேண்டும். இந்த இரண்டுதான் சாத்தியம். இதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அரை நிமிடம். அதிகம் போனால் ஒரு நிமிடம். ஆனால் இதென்ன மணிக்கணக்காகச் சிந்தனைகள்? எத்தனை சிந்தனைகள், எவ்வளவு எண்ணங்கள்! எண்ணங்கள் என்பது வார்த்தைகள். வார்த்தைகள் காலத்துக்கு உட்பட்டவை. இவ்வளவு நேரத்தில் அதிகபட்சம் இவ்வளவு வார்த்தைகளே சாத்தியம் என்ற காலவரைக்கு உட்பட்டவை. ஆனால் மணிக்கணக்கில் எண்ணங்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கிறேன்! கடவுளைக்கூடக் கொண்டு வந்துவிட்டேன்! கடவுள் காலத்துக்கு உட்பட்டவரா?

எனக்குத் தெரியாது. எனக்கு காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை, இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது இரண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுதத்து என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரையில் ரெயில் நின்று கொண்டிருக்கிறது. அது கிளம்பிவிடவில்லை நான் அதைப் பிடிப்பதற்கு அதைத் துரத்திக்கொண்டு போக வேண்டியதில்லை. இந்த ஓட்டைப் பெட்டி, உப்பிப்போன பையுடன் திண்டாடித் தடுமாறி ஓட வேண்டியதில்லை. ஆனால் அப்படி இல்லை. காலம் எனக்கு வெளியேதான் இருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகள். ஆறு ஆண்டுகள். எண்பத்தொரு நாட்கள். ஒரு மாதம் நான்கு நாட்கள். பஸ்சில். பெருச்சாளி ஊர்தல். ஐந்து குழந்தைகள். கூட நிறையக் கோழிகள். கிரீச் கிரீச். கொக்கரக்கோ இல்லை. இம்முறை கடவுள் பிரத்தியட்சம்.

கடவுள் என்றால் என்ன? என் மனப் பிராந்தி. கடவுளைப் பார்த்தவர் யார்? அவருக்கு
என்ன அடையாளம் கூற முடியும்? அவர் என்னும்போதே கடவுள் ஏதோ ஆண் பால் போல ஆகிவிட்டது. கடவுள் ஆண் பாலா? ஐந்து குழந்தைகள் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் காலம் நின்றுவிட்டது. நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். ரெயில் பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறேன். என்ன? எங்கே ரெயில்? எங்கே ரெயில்?

அவன் டிக்கட் கொடுப்பவர் கொடுத்த பாக்கிச் சில்லறையை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். உப்பியிருந்த தோள் பையால் ஒரு கையை மடக்க முடியாமல் அப்படியே அகற்றி வைத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரெயிலில் ஏறிக் கொண்டான். பையில் திணித்து வைத்திருந்த அலுமினியத் தம்ளர் விலா எலும்பில் இடிக்கும்போது அவனுக்கு வலிக்கத்தான் செய்த

மலத்தில் தோய்ந்த மானுடம்

உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலம் என்று பெயருடைய தன் காதலியை (படத்தில் அவள் ஒரு தலித் பெண்) க மலம் என்று பிரித்து உச்சரித்து அழைப்பார் படத்தின் நாயகன் கமலஹாசன். பொது புத்தியின் மட்டமும் இதுவே. மலம் என்றவுடன் பெரும் அசூயை வந்து மனதைக் கவ்விக் கொள்கிறது. சுத்தம்-அசுத்தம் குறித்த நம்முள் படிந்துள்ள கருத்தாக்கங்களின் துணையுடன் அந்த வார்த்தையே அவ்வாறு அகத்துள் கிளைகிறது என்றால் என்றாவது நாம் தினமும் பாதாள சாக்கடைகளுக்குள் முத்து எடுப்பவர்களைப் போல் நுழைந்து கேசம் எல்லாம் மலத்துடன் வெளிவரும் மாந்தர்களின் மனநிலை குறித்து சிந்தித்திருக்கிறோமா? மனித மலத்தை மனிதர்களே கையால் அள்ளும், சுத்தம் செய்யும் இத்தகைய நடைமுறைகள் நம் காலத்திலும் நீடிப்பது சரியா.

Old  man நம் கரங்களையே வலது - இடது எனப் பிரித்து அவைகளின் பயன்பாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மலம் கழுவ இடது கரம், உண்ண வலது கரம் என்கிற இந்த வகைப்பாடுகள் வட இந்தியாவில் இத்தனை அழுத்தமாக இல்லை. (வட இந்தியர்கள் உண்ணும் பொழுது மிக சகஜமாக இடது கையை பாவிக்கிறார்கள்) உடலில் உள்ள உறுப்புகளைப் பிரிப்பதில் தொடங்கிய ஒழுக்க விதிமுறைகள் மெல்ல மெல்ல மனிதர்களையும் அவர்களின் வேலையின் அடிப்படையில் கூறுகூறாய்ப் பிரித்தது. இன்றும் ஜாதியின் பெயரால், அவர்கள் செய்யும் வேலையின் பெயரால் இந்த தேசத்தில் மனிதர்களை இந்து மதம் பிரித்து வைத்துள்ளது. உலகமே நிறவெறிக்கு எதிராக அணி திரளும் நேரம், நம் தேசத்தில் தினந்தோறும் தலித்துகள் பல விதமான அடக்குமுறைகளுக்கு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். மதத்தின் நடைமுறைகளுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்கள் பல ஏட்டுச் சுரைக்காயாய் நம் சட்ட அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே அதனை மீறுபவர்களாக உள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் ஏதும் தேவையில்லை. நம் உடலின் ரத்தமும் சதையுமாம் சதா தங்கிக் கிடக்கும் 200 கிராம் மலத்தை நினைவில் கொன்டு பயணத்தைத் தொடருவோம்.

இந்திய நாகரிகங்களைப் பற்றிப் பேசுகையில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து, ஹரப்பா நாகரிகத்தைப் பற்றிப் பெருமை பொங்க நம் வரலாற்று அறிஞர்கள், அகழ்வாய்வாளர்கள் பேசுவார்கள். அந்த நாகரிகத்தின் குடியிருப்புகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன, தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள், கழிவுநீர் வடிந்தோட வாய்க்கால்கள் இருந்தன என ஒரு மிகப்பெரிய பட்டியல் பாடத்திட்டம் வரை எட்டியிருக்கிறது. அத்தகைய ஒரு சமூகம், அதன் கட்டமைப்புகளின் தொடர்ச்சி எப்பொழுது மறைந்து போனது. ஜாதியின் பெயரால் இந்தியாவில் தலித்துகள் மீது இன்று நடக்கும் கொடூரங்கள் குறித்து நாம் பெருமை கொள்ள இயலுமா?

சுத்தம், சுகாதாரம், தூய்மை, மாசுபாடு, தலைவிதி குறித்த பார்ப்பனிய விழுமியங்களின் அடிப்படையில்தான் இன்று நடைமுறையில் உள்ள இழிவான ஜாதியப் படிநிலை உருவானது. அந்தப் படிநிலையின் கீழ்த் தளத்தில் தலித்துகள் மொத்த ஜாதிய கட்டுமானத்தின் சுமையைத் தாங்குபவர்களாக வடிவமைக்கப் பெற்றது. தெருக்களைச் சுத்தம் செய்வது, குப்பைகளைப் பெறுக்குவது, தோல் பயன்பாட்டுடைய தொழில், மனித-மிருக சடலங்களை அப்புறப்படுத்துவது/ எரியூட்டுவது, பன்றிகள் வளர்ப்பது/ மேய்ப்பது, மனித மலத்தை அள்ளுவது /அப்புறப்படுத்துவது என இந்தப் பணிகள் மட்டுமே குறிப்பிட்ட ஜாதிகளுக்கு உரியதாகப் பட்டியலிடப்பட்டது. 2000 ஆண்டுகளாக அது தொடர்ந்து நடைமுறையிலும் கச்சிதமாக இருந்தும் வருகிறது. பார்ப்னியர்கள் மட்டுமின்றி இந்தக் கட்டுமானத் திட்டத்தை அப்படியே இடைநிலை ஜாதிகளும் அப்படியே சுவிகரித்துக் கொண்டனர்.

ஹன், ஹாதி, பால்மிகி, தணுக், மேத்தார், பங்கீ, பாகீ, மிரா, லல்பெகி, பாலாஷ்ஹி, சுகுறா, மாதீகா, மாலா, தொட்டி, நீர்தொட்டி, சக்கிலியர்கள், அருந்ததியர் என விதவிதமான பெயர்களால் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பெயர்கள் வேறுவேறாக இருப்பினும் இவர்களின் சமூக மதிப்பு ஒன்றாகவே உள்ளது. எல்லா நிலப்பரப்புகளிலும் பொதுவாக நிலமற்றவர்கள்தான் இந்தத் தொழிலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் வேற்று மாநிலத்தவர்கள் கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆந்திராவில் மலம் அள்ளுதலில் ஈடுபட்டுள்ள மேத்தார்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், மாதீகாக்கள் ஆந்திராவிலிருந்து வட தமிழகத்திற்குக் கொணரப்பட்டனர். ஒரிசாவைச் சேர்ந்தவர்கள் வட ஆந்திராவில் குடியமர்த்தப்பட்டனர். ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்தான் இலங்கை மற்றும் பங்களாதேஷில் மலம் அள்ளுகிறார்கள். மியான்மர் மற்றும் பல தெற்காசிய நாடுகள் வரை நம் பெருமிதங்கள் விரவிக் கிடக்கிறது.

நம் தேசத்தின் தலை நகரத்தில் பீ அள்ளுபவர்கள் பெரும்பகுதி தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களே. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பாகிஸ்தான் அனைத்து இந்துக்களையும் இந்தியாவிற்கு அனுப்பியது, ஆனால் அதுகாறும் அங்கு மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தலித்துகளை அனுப்ப மறுத்தது. அத்தியாவசிய சேவைகள் என அவர்களைத் தலைப்பிட்டுப் பாதுகாத்துக் கொண்டது. 1947 டிசம்பரில் அம்பேத்கார் இது குறித்துப் பல முறை கேள்விகளை எழுப்பினார், நேருவுக்குக் கடிதம் எழுதினார். இந்திய அரசோ காங்கிரஸ் கட்சியோ இதனைக் கண்டுகொள்ளவேயில்லை.

பார்ப்பனியர்கள் வசிக்கும் அக்கிரகாரத்தின் வீடுகளில் உள்ள கொல்லைக்குச் சென்று பீயை அள்ளுவது என்கிற நடைமுறையோடுதான் இந்த இழிவு தொடங்கியது. கிராமங்களின் தொழில்நுட்பவல்லுனர்களாக விளங்கிய தலித்துகளை மிகுந்த அடக்குமுறையின் பெயரில் கட்டாயப்படுத்தித்தான் இத்தகைய பணியில் ஈடுபடுத்தினார்கள். விவசாயம்சார் தோல் கருவிகளை அதுகாறும் தயாரித்து வழங்கிய தலித்துகளின் மீது திணிக்கப்பட்டதே இந்த இழிவு. சொந்த நிலத்தில் விவசாயம் செய்த தலித்துகள் மீதும் பல அடக்குமுறைகள் ஏவப்பட்டன. விவசாயம் மும்முரமாய் நடைபெற்று அறுவடையின் தறுவாயில் வயலின் விளைச்சலை ஆதிக்க சாதியினர் கொள்ளையடித்துச் செல்லுவது என்கிற நடைமுறை பல பகுதிகளில் காணப்பட்டது. ஓரிரு முறை விளைச்சலைப் பறிகொடுத்த பின் ஊரைவிட்டு வெளியேறி வேறு பிழைப்புத் தேடிச் செல்லும் தலித்துகளை இத்தகைய பணிகளில் தந்திரமாக ஈடுபடுத்தினார்கள். இவர்களின் நிலங்கள் ஆதிக்க ஜாதியினரால் பங்கிடப்பட்டது.

காலனியகாலத்தில் வெள்ளையர்கள் இங்கு நிலவிய கட்டுமானத்தை அப்படியே தங்கள் சௌகரியத்திற்கு பாவித்துக்கொண்டனர். வெள்ளையர்களின் நிர்வாக வளாகங்கள், குடியிருப்புகள், நீதிமன்றங்கள், ராணுவ கண்டோன்மெண்டுகள் என எங்கும் உலர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. பார்ப்பனியம் ஏற்படுத்தி வைத்திருந்த நடைமுறையை வெள்ளையர்கள் ஸ்தாபனப்படுத்தினார்கள், நிர்வாகக் கட்டுமானமாக உருமாற்றினார்கள். இங்கு வந்த மிஷனரிகள் தலித்துகளின் வாழ்நிலையில் பெரும் மாற்றம் எதனையும் கொணரவில்லை. வெள்ளையர்கள் துவங்கிய ரயில்வே துறையில் ஆயிரக்கணக்கான தலித்துகள் மலம் அள்ளும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்றும் உலகத்திலேயே அதிகப்படியான மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது இந்திய ரயில்வே துறையே. சாலைகள் போடுவதற்கென கிராமங்களில் இருந்து வெளியேறி சாலையோரம் மெல்ல மெல்ல பயணித்து நகரங்கள் வந்தடைந்த தலித்துகளை அந்த அந்த நகரமே விழுங்கிக் கொண்டது. எல்லா நகரங்களையும் சுகாதாரத்துடன் பேணுவதற்குக் குறைந்த கூலியில் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் தேவை. சுகாதாரம் சார்ந்த பணிகளுக்குத் தொடர்ந்து மிகக் குறைந்த தொகையைத் தான் அரசாங்கங்கள் ஒதுக்கி வருகின்றன. சுகாதாரம் என்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றதில்லை.
1989ல் அரசாங்கம் வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி இந்தியாவில் 6 லட்சம் பேர் மனித மலத்தை அப்புறப்படுத்தும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விபரங்கள் தவறானவை என்கிறது சபாயி கர்மசாரி ஆந்தொலன் (Safai Karamchari Andolan). அவர்களின் கணக்குப்படி அது 13 லட்சம் ஆக உயர்ந்து கிடக்கிறது. 1996ல் விஜயவாடாவில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஆந்திராவில் மிகப் பெரிய வீச்சுடன் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. தற்பொழுது தில்லியைத் தலைமையாகக் கொண்டு பல மாநிலங்களில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் விரவிக்கிடக்கிறது. இந்த அமைப்புத் தொடங்க முக்கிய காரணமாய் இருந்தவர்களில் ஒருவர் பெசவாடா வில்சன். கர்நாடக மாநிலத்தில் ஒரு மாதிகா குடும்பத்தில் பிறந்தவர் பெசவாடா வில்சன்.

பெசவாடா வில்சனின் பெற்றோர், உறவினர்கள் கோலார் தங்கவயலில் வசிக்கும் 76,000 (1960-70ல்) தொழிலாளர்களின் குடியிருப்புகளில் உள்ள திறந்தவெளி உலர் கழிப்பிடங்களில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களே. ஆந்திராவின் குப்பத்தில் தொடக்கக் கல்வி, பெங்களூரில் முதுகலைப் பட்டம் மற்றும் இறையியல் இளநிலை பட்டப்படிப்பும் அதன் பின்னர் சமூகப்பணியென அவரது பயணம் தொடங்கியது. பின்னர் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயத் துவங்கினார், அவர்களில் பெரும் பகுதி குடிகாரர்களாக இருந்தனர். அவர்களின் பணியிடங்களுக்குச் சென்று சூழ்நிலையை விழுங்க முற்பட்டார் வில்சன். அந்த வீச்சம், நாற்றம்தான் அவர்களைக் குடியின் பால் இட்டுச் சென்றது. நாள்தோறும் கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளைப் பெரிய தொட்டிகளில் கொட்டி, பின்னர் அதை வேறு ஒரு இடத்திற்குச் சென்று அப்புறப்படுத்த வேண்டும். மல வாளியைத் தூக்கி ட்ராக்டரில் ஏற்ற வேண்டும். இந்த வேலையைச் செய்யும் பொழுது அவர்களின் உடலில் மலம் வடிந்துவிடுவதைப் பார்த்த வில்சன் கதறக்கதற வெடித்து அழுதார்.

வில்சன் அதனை இவ்வாறு தனது வார்த்தைகளில் கூறுகிறார், "நான் அந்தக்குழிக்குப் பக்கத்திலேயே விழுந்து அழுது புரண்டேன். நான் பார்த்த அந்தக் காட்சிக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. நான் சாக விரும்பினேன். நான் தொடர்ந்து அழுதேன். முதலில் அந்தத் தொழிலாளர்களுக்கு நான் ஆறுதல் சொன்னேன். இப்பொழுது அவர்கள் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் வருத்தப்பட்டு, எனக்கு என்ன ஆனது? ஏன் அழுகிறாய்? என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் கேள்விகள் என்னை மேலும் மேலும் அழ வைத்தது. நான் அந்தக் காட்சியைப் பார்த்த பின்பு, எனக்கு உலகமே தலைகீழாக மாறிப்போனது. நான் செத்துவிட வேண்டும் என்று சொன்னேன். அவர்கள் இந்த வேலையைச் செய்யக் கூடாது; நிறுத்திவிட வேண்டும் என்று சொன்னேன். என்னுடைய துயரம் அவர்களை பாதித்துவிட்டதாக நினைக்கிறேன். முதல் முறையாக, இந்த வேலை தங்களை பாதிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அவர்களால் என்ன செய்ய இயலும்? அவர்கள் இந்த வேலையைச் செய்ய மறுத்தால், வேலையில் இருந்து தூக்கியெறியப்படுவார்கள். அவர்களின் வீட்டில் எப்படி உலைவேகும்?

என்னால் சாப்பிட முடியவில்லை; தூங்க முடியவில்லை. எனக்கு இரண்டு வழிகள் இருந்தன: ஒன்று, நான் சாக வேண்டும் அல்லது இந்தக் கொடிய வழக்கத்தை நிறுத்த நான் ஏதாவது செய்தாக வேண்டும். முதலில் சொன்னது எளிதானது. இரண்டாவது கடினமானது. நான் செத்துப் போவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். 1982 முதல் இயங்கத்துவங்கிய வில்சன் 1996ல் தீவிரமான மனித உரிமை ஆர்வலர்களான தனது நண்பர்களுடன் இணைந்து அமைப்பைத் தொடங்கினார். சமீபத்தில் அவுட்லுக் இதழ் 25 நபர்களை கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அது இந்தியாவில் எக்காலத்திலும் அதிகாரத்திற்குச் செல்ல முடியாத வர்களின் பட்டியல். மகத்தான போராளிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அதிகாரத்திற்கு எதிரான அறிவுஜீவிகள், சமூகங்சார் களப்பனியாளர்கள் என நிண்டு சென்றது. அதில் பெசவாடா வில்சன் இடம் பெற்றிருந்தார். இது அவரது பணிக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.

1982 முதல் தொடர்ந்து பல வடிவங்களில் தன் போராட்டத்தை முன்னெடுத்தார். 1993ல் நாடாளுமன்றம் இத்தொழிலைத் தடை செய்து சட்டம் இயற்றியது (கையால் மலம் அள்ளுவோர் பணி நியமனம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடங்கள் (தடுப்பு) சட்டம்). இது வில்சனின் போராட்டத்திற்குக் கிடைத்த சட்டபூர்வமான வெற்றி. பின்பு இந்தச்சட்ட நகலை அரசாங்க அதிகாரிகளுக்குத் தொடர்ந்து அனுப்பத் துவங்கினார். மகஜர்கள் தினமும் திசைகள் எங்கும் பறந்தது. பத்திரிகைகள் கொஞ்சம் கருணை காட்டின. 1994ல் பெங்களூரூவில் இருந்த திறந்தவெளி கழிப்பிடங்கள் அனைத்தும் தண்ணீர் விட்டுக்கழுவும் வகையில் மாற்றம் செய்யப்பட்டன. அந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் வேறு பணியில் மாநகராட்சி அமர்த்திக்கொண்டது. ஆரம்பம் முதலே வில்சன் தனது பார்வையில் தீர்க்கமாக இருந்தார்.

கட்டாயமாகக் கூலி உயர்வு, புதிய கருவிகள் எனப் பேரங்கள் எதிலும் ஈடுபடுவதில்லை. இந்தியாவில் எந்தப் பகுதியிலும், ஒரேயொரு திறந்தவெளி கழிப்பிடம் கூட இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், இந்த ஜாதி அமைப்பு உடனடியாக மலம் அள்ளும் ஜாதியைத் தோற்றுவித்துவிடும். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சவாலைத் தனது தோள்களில் ஏற்றுக்கொண்டு தேசமெங்கும் பயணம் செய்து வருகிறார். 1993ல் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பொழுதும்கூட, அது 1997வரை இந்திய அரசிதழில் (Gazetter of India) அறிவிக்கப்படவில்லை. 2000வரை எந்த மாநில அரசும் இதுகுறித்து மக்களுக்குத் தெரிவிக்கவில்லை.

தொழில்மயம் ஏற்படுத்திய பெரும் இடப்பெயர்வுகளில் நகரங்கள் வளரத் துவங்கின. அவை இன்று வரை தடையற்று வீங்கிப் பெருத்து வருகின்றன. எந்த நகரத்திற்கும் இத்தனை லட்சம் மனிதர்களை அடைக்கலம் கொடுக்கும் விஸ்தாரம், தண்ணீர், சுகாதாரம் என அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது போன்று நம் அரசுகளிடம் எந்தப் புள்ளிவிபரங்களும் கிடையாது. மேம்பாடு, வளர்ச்சி, தொழில் எனச் சகல துறைகள் சார்ந்தும் நம் இயங்கு மாதிரிகள் மேற்கிலிருந்து பெறப்பட்டவை போன்ற கருத்தாக்கங்கள் நம்மிடையே புழங்குகிறது. அவைகளை கூட நாம் முறையே பெறவில்லை மாறாக அனைத்தையும் பாவனை செய்தே வருகிறோம். நம் பிரதமர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என வருடம் தோறும் வெளிநாட்டுப் பயணங்களை சதா மேற்கொள்கிறார்கள், இத்தனை லட்சம் கோடிகளை செலவழித்து, வர்த்தக-கலாச்சார- தொழில்நுட்ப-அறிவு சார் பகிர்வுகளைப் பரிமாற்றங்களை நடத்தியும் ஏன் நம்மால் உருப்படியாக ஒரு பாதாள சாக்கடையை, கக்கூஸை கட்ட இயலவில்லை. நாடெங்கிலும் உள்ள பேருந்து நிலையங்களில் எப்படி ஒரே மாதிரியாக நாறுகிறது. ஒரு வேளை இது நம் தேசத்து நிலைமையைப் பறைசாற்றும் வீச்சமோ.

கடந்த பத்தாண்டுகளில் சுகாதார நிலைமைகள் மோசமாக படுபாதாளம் நோக்கியே பயணித்துள்ளன. தண்ணீர்ப் பற்றாக்குறை ஒரு புறமும், மறுபுறம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக நம் நீர் நிலைகளைப் பாழ்படுத்தி வருகிறது. பல கிராமங்களின், நகரங்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்த ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் இன்று மாசுபடிந்து மனித உபயோகங்களுக்கு லாயக்கற்றதாக உருமாறிக்கிடக்கிறது. கழிவு நீர்க் குட்டைகளாக அவை இன்று கொசுக்களின் நாற்றங்காலாய் விளங்குகின்றன. பலவிதத் தொற்று நோய்களின் தொகுப்பாக அவை விளங்குகின்றன. இந்தக் கழிவுநீரைக் கடக்கும் பொழுது நம் மத்தியத் தரவர்க்கம் முகம் சுழிக்கும், கை லேஞ்சால் மூக்கை மூடிக்கொள்ளும். ஆனால் இந்தியாவெங்கும் சொல்லி வைத்தார் போல் தலித்துகளுக்கு எப்படி அரசாங்கங்கள் இந்தக் கழிவுநீர்க் குட்டைகளுக்கு அருகிலேயே வீடுகளை அமைத்துத் தருகிறது.

குப்பை மேடுகளில்தான் சேரிகள் அமைக்க அரசுகள் அனுமதியளிக்கிறது. நகரத்தின் கழிவுகளை நாளெல்லாம் சுமப்பவர்களுக்கு அதன் மீதே குடியிருக்க அனுமதிக்கும் அரசுகள், உயர் ஜாதி மனோபாவம் கொண்ட இந்து அரசுகள்தானே. சென்னை கூவம் நதிக்கரையில் வசிப்பவர்கள் அந்த நகரத்தை அழுக்காக்குகிறார்கள், நகரம் வழியே பயணிக்கும் பொழுது அவர்களின் இருப்பு பார்வையை உறுத்துகிறது ஆதலால் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு பூங்காக்கள் அமைக்கும் திட்டம் துவங்கி உள்ளது. வெளியேற்றாவிட்டால் வெளிநாட்டு மூலதனம் நின்றுவிடும் அல்லவா.

மலம் அள்ளுபவர்கள் தங்கள் வாழ்விடங்கள் சார்ந்தும், பணி சார்ந்தும் பலவித நோய்களுக்கு ஆளாகிறார்கள். டெங்கு, மலேரியா, வயிற்றுப் போக்கு, சத்துக் குறைபாடுகள், சுவாசக் கோளாறுகள் என ரகம் ரகமான நோய்களுக்குப் பஞ்சமில்லை. குழந்தைப் பருவத்திலேயே பல சிசுக்கள் இறப்பிற்கு இவர்களின் வாழ்விடங்களே காரணம் எனப்பல ஆய்வுகள் உரத்துத் தெரிவிக்கின்றன. மறுபுறம் இத்தகைய கழிவுகளை தங்களின் புதிய வாழ்க்கை முறையின் பயனாய், நுகர்வு மயத்தின் விளைவாய்க் குற்ற உணர்வின்றி பணத்திமிரின் அடையாளமாய் வெளியேற்றும் மத்திய தரவர்க்கத்திற்கு சுகதார வசதிகள் அனைத்தும் அரசு மானியத்துடன் வழங்குகிறது. இன்றும் கூட தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள் இந்திய ஜனத்தொகையில் 33% பேருக்குத்தான் எட்டியிருக்கிறது.

2003ல் சமூக நீதி மற்றும் மேம்பாட்டிற்கான அமைச்சகம் 6.7 லட்சம் மலம் அள்ளுபவர்கள் இருப்பதாக அறிவித்தது. 2010 க்குள் உலர் கழிப்பிடங்களை இல்லாமல் ஆக்க வேண்டும், கையால் மலம் அள்ளும் நடைமுறை ஒழிய வேண்டும் என்கிற வில்சனின் கனவை நடை முறைப்படுத்தும் பணிகள் தொடர்கிறது. ஆந்திராவில் வில்சன் தனது அமைப்பின் விஸ்தாரத்துடன் தீவிரமான போராட்டங்களை நடத்தினார். அந்த அமைப்பு, போராட்டம், வில்சன் ஆகிய முப்பரிமாணங்களுடன் வெளிவந்துள்ள கீதா ராமசாமியின் India Stinking மற்றும் மாரி மார்சல் தக்கக்காராவின் Endless Filth நமக்கு விரிவான பார்வைகளைப் புரிதல்களை முன்வைக்கிறது.

சபாயி கர்மசாரி ஆந்தொலன் தனது அமைப்பின் உறுப்பினர்களுடன் ஆந்திராவெங்கும் சென்று கெடு வைத்து உலர் கழிப்பிடங்களைத் தகர்த்து. அந்தத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு, மாற்றுப்பணி வழங்கும் திட்டங்களை நடை முறைப்படுத்த அரசை வற்புறுத்தியது. யெல்லா ரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த உலர் கழிப்பிடத்தைத் தகர்க்கச் சென்ற பொழுது நீதிபதி அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இது அரசாங்கத்தின் சொத்து என்றார் நீதிபதி. காவல் துறையிடம் சென்று 1993 சட்டத்தின் நகல்களை வழங்கி ஒரு வழியாக அனுமதி கிடைத்தது. பல ஆண்டுகள் அங்கு பணியாற்றியவர் தான் சம்மட்டியை எடுத்து முதல் அடியை வைத்து அன்றைய உடைப்பைத் தொடங்கினார். இது ஏதோ ஒரு காலத்தில் அல்ல மார்ச் 2005ல் நடந்த சம்பவமே.

சபாயி கர்மச்சாரிகளின் தேசிய ஆணையம் தனது விரிவான ஆய்வை மேற்கொண்டது. ராணுவம், பொதுத் துறை நிறுவனங்கள், மாநகராட்சிகள் எனப் பல துறைகளில் இன்றும் இழிவான நடைமுறைகள் உள்ளதை அது சுட்டிக்காட்டியது. ராணுவத்தின் பல முகாம்களில் இன்றளவும் கையால் மலம் அள்ளும் வழக்கம் உள்ளது. இதில் இந்திய ரயில்வே துறைதான் அதிகப்படியான ஆட்களை இத்தகைய பணியில் ஈடுபடுத்தி வருகிறது. ஏறக்குறைய பெரு நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களின் சுத்திகரிப்பு சார்ந்த பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ரயில்வேயிடம் ரூ.6500 கூலி கிடைத்தது, யுரெகா ஃபொர்ப்ஸ் போன்ற நிறுவனம் தன் தொழிலாளிக்கு வழங்குவது வெறும் ரூ.2500 மட்டுமே. ரயில்வே நிர்வாகம் எத்தனை வாசகங்களை எழுதிப் போட்டாலும் நாங்கள் ரயில் நின்ற பின்புதான் மலம் கழிப்போம் என்கிற ஒரு பெரும் வர்க்கமே நம்முடன் வாழ்ந்து வருகிறது. இவர்களின் விளைவாய் ரயில்வேயில் உள்ள 40,000 பெட்டிகளிலிருந்து தினந்தோறும் 2.74 லட்சம் லிட்டர் மலம் வெளியேறுகிறது.

உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்டித்தும் ரயில்வே நிர்வாகம் செவிசாய்ப்பதாக இல்லை. 40,000 பெட்டிகளில் இதுவரை 261 பெட்டிகளில் மட்டுமே கலன்கள் பொறுத்தப்பட்டுள்ளன. 5 ரயில் நிலையங்களில் மட்டுமே முற்றிலும் நீராலான கழுவும் (Aprons) வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக 145 ரயில் நிலையங்களில் தண்ணீரைப் பீச்சி அடித்து மலத்தை அகற்றி சாக்கடையில் தள்ளும் நடைமுறை உள்ளது. நாடெங்கிலும் 6856 ரயில் நிலையங்கள் உள்ளன என்பது இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நிறைய செலவு ஆகும், ரயில்வேயிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கைவிரிக்கிற மனோபாவம் தான் ரயில்வே அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது. 2010ல் நடைபெறவிருக்கும் காமன் வெல்த்து போட்டிகளை முன்னிட்டு தில்லியைச் சுற்றியுள்ள 18 ரயில் நிலையங்களை அழகுப்படுத்த 4000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருக்கிறது. மனம் இருந்தால் . . . மனம் இல்லையெனில் . . .

சென்னையில் மட்டும் 2800 கிமீ நீளத்திற்கு பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சி, கருவிகள் என எதுவும் இங்கு வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் மட்டும் பாதாள சாக்கடைகளில் இறங்கி விஷ வாயுக்கள் தாக்கி இறப்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தொழில் சார் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 22,000. காஷ்மீர், வட கிழக்கு, ராணுவம் என எத்தனை சொற்றொடர்களை அடுக்கினாலும் இந்த எண்ணிக்கையை சமன் செய்ய இயலாது.

1912ல் காலனிய முனிசிபாலிட்டி திட்டக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒரு வெள்ளைய அதிகாரி கூறினார், நமக்கு தேவை மிகவும் அருமையான சுகாதார நடைமுறைகள் அல்ல, மாறாக குறைந்த செலவிலான திட்டங்களே. அந்த மனநிலைதான் இன்றும் நம் மத்தியில் புழங்குகிறது. மனித மான்புகளுக்கு மதிப்புடைய வழிமுறைகளைவிட, மலிவான நடைமுறைகளையே நாம் தேர்வுச் செய்கிறோம். மலம் அள்ளுவதைவிடக் கொடுமையானது நிலத்தடி மலத்தொட்டிகளை (Septic Tank) அப்புறப்படுத்தும் பணி. நம் சுற்றத்தில் மிக சகஜமாக இந்தப் பணி நடைபெறுகிறது. விஷ வாயுக்கள் நிரம்பிய தொட்டிகளில் இறங்கி வாளியால் அள்ளி ட்ரம்களில் நிரப்பி ஊருக்கு வெளியே அப்புறப்படுத்தி வருவார்கள்.

மலம் மக்கத் துவங்கியதும் அங்குள்ள ஆக்சிஜனை மீதேன் வாயுவால் இடம் மாற்றம் பெறுகிறது. ஹைட்ரஜன் சல்பைடும் அத்துடன் இணைகிறது. இந்த வாயுவை சுவாசித்தால் உடன் மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபடும், மயக்கம் வந்துவிடும். மீதேன்வாயு உடன் தீப்பற்றக்கூடியது. இந்த வாயுக்களின் அடர்த்தியை அறியும் கருவிகள்கூட நம்மிடம் கிடையாது. தற்சமயம் புதிய எந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மலத்தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. அவைகளில் மூலதனத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதால் தலித்துகளின் கையிற்கு அது எட்டாக் கனியாக உள்ளது. ஹாங்காங்கில் பாதாள சாக்கடையில் இறங்கு பவருக்கு விண்வெளிக்கு செல்பவருக்கு ஒப்பான உடைகள் வழங்கப்படுகிறது. பாதாள சாக்கடை நன்கு ஒளியேற்றப்பட்டுள்ளன. காற்றோட்டம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடைக்குள் இறங்குபவர் 15 உரிமங்கள் பெற்றிருக்க வேண்டும்.

Cleaning மலம் அள்ளுபவர்களைப் புனரமைக்கும் திட்டங்களை ஆராய குழுக்களை அமைக்க நம் அரசுகள் தவறவில்லை. 1949 முதல் 1976வரை ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டன. 1949ல் அமைக்கப்பட்ட பார்வே கமிஷன் (Barve Commission) மலம் அள்ளுபவர்கள் இந்தப் பணியினைச் செய்ய மறுக்கவில்லையே என்றார். மலம் அள்ளுபவர்கள் தொடர்புடைய பிரச்சினையை ஆராய பார்ப்பனியரை அமர்த்தினால் வேறு என்ன நடக்கும். 10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இத்தொழில்சார் தலித்துகள் வாழ்க்கைப் புனரமைப்புக்கு 460 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் 146.04 கோடிகள் மட்டுமே வந்து சேர்ந்தது. தமிழகத்திலும் அந்தத் தொகை செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. தொடர்ந்து பல மாநில அரசுகளும், ரயில்வே நிர்வாகமும் உச்சநீதிமன்றத்திடம் மனிதர்கள் மனித மலத்தை அள்ளும் நடைமுறை ஒழிக்கப்பட்டுவிட்டதாகப் பொய் சொல்கிறது. தமிழக அரசு அவ்வாறு பொய்யான கூற்றுகளையே நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இப்படியான எல்லா வாசகங்களையும் சபாயிகர்மசாரி ஆந்தொலனின் தொண்டர்கள் புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினர்.

மலம் அள்ளுதலை யாரும் விருப்பத்துடன் செய்ய இயலாது. சமீபத்தில் நரேந்திர மோடி மலம் அள்ளுதல் ஒரு ஆன்மீகத் தொண்டைப் போன்றது என்றார். ஏறக் குறைய காந்தியும் இதை ஒத்த கருத்தையே முன்வைத்தார். சுத்தம் செய்யும் பணி தெய்வீகமானது, ஒரு தாய் தன் குழந்தைக்குச் செய்யும் சேவையைப் போன்றது என்றார். சுழற்சிமுறையில் இங்குள்ள ஜாதிகள் அனைவரும் இந்த ஆன்மீகப் பணியைச் செய்யலாம் என ஏனோ எவரும் முன்வைக்கவில்லை. திண்ணியங்கள்தான் இன்றைய எதார்த்தங்களாக இருக்கும் பட்சத்தில் இந்த ஜாதியப் படிநிலையை ஒழிக்காமல் இங்குள்ள இழிவுகளைப் போக்கிக்கொள்ள இயலுமா?

இவைகளை எல்லாம் கடந்து ஒரு மலம் அள்ளும் தொழிலாளியின் மகன்/மகள் கல்வி பெற்று மேற்படிப்பிற்கோ, வேலை கிடைத்தோ உயர் கல்வி நிறுவனங்களில்/ பொதுத் துறையில் நுழைந்து விட்டால் அல்லது முயன்றால் என்ன நடக்கும் என்பதனை நாம் கடந்த ஓர் ஆண்டாகக் கண்கூடாகப் பார்த்தோம். இந்தியாவின் நேசக் கரங்கள், ஊடகங்களின் குணமளிக்கும் தொடுதல் என இட ஒதுக்கீட்டு அறிவிப்பிற்குக் கிடைத்த எதிர் வினைகளை இந்தத் தேசம் கண்டது. மொத்தக் கட்டுமானத்தின் தரமும் கெட்டுப் போச்சு என இவர்கள் மாரடித்து அழுவது ஆபாசங்களின் உச்சம் அல்லவா. இந்து மதத்தின் சகல கரங்களும் அரசை, அதிகாரத்தைத் தன் பிடியில் வைத்திருக்க விழிப்புடன் இருக்கிறது.

திருவிழாக்கள் வந்துவிட்டால் இவர்களுக்குப் பெரும் பிரச்சினையே. சித்திரைத் திருவிழா, மகா மகம், கந்த சஷ்டி, அரசியல் மாநாடு அல்லது லட்சக்கணக்கில் மக்கள் கூடும் எந்த நிகழ்வாக இருந்தாலும் அந்த ஒரு வாரகாலம் சோறுதிங்க இயலாது என்பது அவர்களுடன் உரையாடுகையில் புலப்படுகிறது. பெரும் திருவிழாக்களின் பொழுது நகரமே பீயால் மொழுகப்படுகிறது. ஆறுகள், தெருக்கள், சந்துகள், மறைவிடங்கள் என நகரமே கழிப்பிடமாக உருமாறுகிறது. இந்தப் பீயை அள்ளி அப்புறப்படுத்தும் வரை உறக்கம் இல்லை, சோறு தண்ணீர் இல்லை. அய்யப்பசாமி, பழனி சீசன் வந்துவிட்டால் ஊரை விட்டு ஓடிவிடலாம் போல் உள்ளது தான் ஆனால் குடும்பத்தை மனதில் வைத்துத்தான் இந்தக் கருமத்தைச் செய்து தொலைக்க வேண்டியுள்ளது என்பதே அவர்களின் மன வேதனையாக உள்ளது.

ஹரியானாவில் ப்ரின்ஸ் என்கிற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த பொழுது அதை நேரடி ஒளிபரப்பாகவே ஊடகங்கள் ஒளி பரப்பின. அப்படியிருக்க ஏன் பாதாள சாக்கடையில் வருடந்தோறும் இறக்கும் 22,000 பேரில் எவரையும் ஊடகங்கள் காட்டுவதில்லை. விவசாயிகள் தற்கொலையைப் போல் இதனையும் இந்தத் தேசம் சௌகர்யமாய் மறந்திடவே விரும்புகிறது. மொழியியலும் தன் பங்கிற்கு உதவிகள் செய்தது. Manual Scavengers என்கிற பதம் Sanitary Workers ஆக உருமாறியது. Human Excreta உருமாறி Night Soil ஆனது. Night Soil Cleaners என்றுதான் இவர்கள் ரயில்வேயில் அழைக்கப்படுகிறார்கள். நவதாராளவாத அரசுகள் பண்பட்ட மொழியில் தான் பேசும். நவதாராளவாத அரசுகளின் பண்பட்ட மொழி இது.

அரசியல் செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாடுடைய தலித்துக்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அரசியல், அரசு சார்ந்த சலுகைகள் கிடைப்பதில்லை. ஆனால் அரசியல் ஒரு சாக்கடையென கூறும் மத்தியத்தர வர்க்கம்தான் அரசாங்கத்தின், அரசியலின் சகல பலன்களையும் அனுபவிக்கிறது. சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் ஆகும் தருவாயில் தன் குடிமக்களுக்குக் கக்கூஸ்கூட கட்டிக் கொடுக்க வக்கற்ற தேசமாகவே நம் தேசம் விளங்குகிறது. கழிவறையைக் கட்டத் தெரியாத தேசம் மறுபுறம் வல்லரசாகத் துடிக்கிறது. நல்ல சுகாதாரமான கழிவறைகள், பாதாள சாக்கடைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எனச் சுகாதாரம் சார்ந்து இயங்கும் விஞ்ஞானிகளை நாம் உருவாக்கத் தவறிவிட்டோமா, அல்லது இனம் காணத் தவறிவிட்டோமா? சுகாதாரம் சார்ந்த, மக்கள் சார்ந்த இயங்கும் விஞ்ஞானி எவரையும் இந்தத் தேசத்தின் ஜனாதிபதியாக நாம் கற்பனை செய்து பார்க்கும் காலம் வருமா . . .

நாடெங்கும் இந்த இழிவை போக்க பயணமாக வரும் பெசவாடா வில்சனுடன் உரையாடும் பொழுது பல விதமான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். மொத்தம் உள்ள 602 மாவட்டங்களில் தற்சமயம் 140 மாவட்டங்களில் கையால் மலம் அள்ளும் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த இழிவைப் போக்குவதற்கும் சற்றும் சளைத்ததல்ல அவர்களுக்கு சுயமரியதையுடன் கூடிய மாற்று வாழ்வுரிமைகளை பெற்றுத் தருவது. தில்லியில் 60கிமி மெட்ரோ ரயிலுக்கு 10,570 கோடி ரூபாய் செலவிடும் அரசு, மலம் அள்ளும் சக மனிதர்களின் வேதனையை புரிந்துகொள்ள மறுக்கிறது. வாழ்வுரிமை திட்டங்களுக்கு பணம் ஒதுக்க மறுக்கிறது.

நம் சுற்றுப்புறத்தில் மாந்தர்கள் இத்தகைய இழிவுகளுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் சம காலத்தில்; சுயமரியாதையுடன் கூடிய நிறைவான வாழ்வு நம் சமூகத்திற்கு சாத்தியமா. நாம் ஆரோக்கியமான சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா, இதற்கும் நமக்கும் தொடர்பில்லை எனக் கூறி நாம் ஒதுங்கி வாழ்தல் தகுமா. தமிழகத்தின் ஜனத்தொகை 20% பேர் தலித்துக்கள், அவர்களை ஜாதி எனும் கொடிய அமைப்பின் மேலாதிக்கத்தின் கீழ்தான் மலத்தை கையால் அள்ளும் வழக்கம் நிலைப் பெற்றுள்ளது.

அடுத்து நம் வசிப்பிடத்தில் யாரேனும் ஒருவர் பாதாள சாக்கடையிலிருந்து வெளியேறி வரக் கூடும், அவரின் முகத்திலும் கேசத்திலும் அப்பியிருக்கும் மலம் நம்முடையதாகக்கூட இருக்கக்கூடும்.
நன்றி- Endless Filth, India Stinking, Tehelka
--
Until lions have their own historians,
histories of the hunt will glorify the hunter.

சொற்களின்

amma